பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

561


என்று 11-ந் தேதி பெரியார், கலைஞருக்கக் தந்தி அனுப்பினார். 12-ந் தேதி காலை எல்லா அமைச்சர்களும் வந்து தந்தை பெரியாருக்கு மாலை சூட்டினார்கள். பெரியாரோடு சேர்ந்து அனைவரும் அண்ணா சதுக்கம் சென்று மலர் வளையம் வைத்தனர். அண்ணா சிலை அருகே இராஜாஜி காமராஜர் படங்கள் நெற்றியில் பட்டை நாமத்துடன் விளங்கியதை மக்கள் அனைவரும் கண்டு நகைத்தனர். பத்திரிகை உலகம் படுத்தியபாட்டை நினைத்தோ என்னவோ, பெரியார், 1 தேதி ஏட்டில், சீக்கிரம் ஓர் ஆங்கில தினசரி துவக்கிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். இன்னொரு பெட்டிச் செய்தியில் அண்மையில் எடுக்கவிருக்கும் (Census) மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், எல்லாரும் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும், தங்களுக்கு ஜாதி இல்லை என்றும் தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்தார் பெரியார்.

13-3-71 "விடுதலை"யில் இராஜாஜிக்குப் பதிலளிக்கும் தலையங்கத்தைப் பெரியார் தீட்டினார். “இது தேர்தல் அல்லவாம்!” என்பது தலைப்பு, "இது தேர்தல் அல்ல, அசிங்கமான பர்மிட், லைசன்ஸ், பணபலம் பெற்ற வெற்றிதான் என்கிறார் இராஜாஜி. இப்படி எழுத இவருக்கு மானம் வெட்கம் இல்லையா? அன்னக்காவடிப் பார்ப்பனர் எத்தனையோபேர் இன்று தொழிலதிபர் - கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்களே யாரால்? எப்படி? நீங்கள் அதற்குள் கற்பனை மந்திரி சபை அமைத்தீர்களே, எந்த நம்பிக்கையில்? தோற்றுப் போனதோடு, தவறான காரணம் வேறா காட்டுகிறீர்கள்? என்னைப் பொறுத்தவரையில் இது சேலம் சம்பவத்துக்குக் கிடைத்த பாராட்டுதல் என்றே கருதுகிறேன். (அங்கே வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல். ஏ. இருவரில் ஒருவர் ராஜாராமன், இன்னொருவர் ஜெயராமன், தமிழர்கள் இனியும் ஏமாந்து சும்மாயிருக்கமாட்டார்கள். ஆகையால் நீங்கள் உங்கள் இனத்தாருக்கு இனியும் தவறான வழிகாட்டாதீர்கள்!" என்று.

“முரசொலி"யோ இந்துவின் திமிர் இன்னும் அடங்கவில்லை; அண்ணா எவ்வளவோ பாடுபட்டு வகுப்பு ஒற்றுமை உண்டாக்கிவைத்தார்; இந்த ஒரு மாதத்தில் அதையெல்லாம் தரைமட்டமாக்கிவிட்டீர்களே! என்றே இடித்துக் காட்டிற்று. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 184 பேர் தி.மு.க. (1967-ல் 138) இந்த முறை தி.மு.க. தவிர்த்த மற்றக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து 50 தான். 14-3-71 அன்று தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், என்.வி. நடராசன் தலைமையில், நாவலர் முன் மொழிய, எம்.ஜி.ஆர். க. அன்பழகன், மதுரை எஸ். முத்து வழிமொழிய, மீண்டும் கலைஞரே தலைவராகப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 15-3-71 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம்