பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

562

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கொள்ளாமல், வெளியில் கடலோடு கலந்த மக்கள் வெள்ளம்; உள்ளே பதவி ஏற்ற 14 அமைச்சர்களும் அவ்வப்போது வந்து தந்தை பெரியாரிடம் வணங்கி வாழ்த்துப் பெற்ற காட்சி மறக்கவொண்ணா மாட்சி, வரலாற்றின் ஆழமான சாட்சி.

“நமது மந்திரிசபை" எனும் சிறப்புத் தலைப்பிட்டுப் பெரியார் 15-ந் தேதி எழுதிய “விடுதலை"யின் தலையங்கத்தில், “இந்தப் புதிய மந்திரிசபையில் எல்லா ஜில்லாக்களுக்கும் ' பிரதிநிதித்துவம் இருக்கிறது. கன்னியாகுமரி நீலகிரி, தர்மபுரி போன்ற சிறிய மாவட்டங்களுக்கு இல்லை; தஞ்சைக்கு மூன்று போய்விட்டது. அதேபோல் பார்ப்பனர் தவிர மற்ற ஜாதிகளுக்குப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். சைவருக்கு இரண்டு, அதிகம்தான். என்றாலும் மொத்தத்தில் பரவாயில்லை. வஞ்சனையாக ஒன்றுமே செய்யப்படவில்லை என்று திருப்தி கொள்ளலாம். இந்த நேரத்தில் கலைஞர் தலைவராயில்லாமல் வேறு யாரிருந்தாலும், நாம் ஒழிந்திருப்போம். இதைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவு விஷயங்கள், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்காது! இது போதாது. கலைஞர் கட்சியின் சர்வாதிகாரியாகவே ஆக்கப்பட வேண்டும். அவர் இப்போது செய்துள்ள எல்லாக் காரியங்களையும் நான் மனநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் தனியே பார்ப்பனர் மீது எந்த வெறுப்புணர்ச்சியுமில்லை, அவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற மனப்பான்மையை ஒழிக்க வேண்டும் என்பதுதான்! மற்றபடி இனி கடவுள் ஒழிப்பிற்காக 5,000 10,000 பேர் சிறை செல்ல, சிலர் கொல்லப்படத் தயாராகுங்கள்! என் அடுத்த அறிவிப்பிற்காகக் காத்திருங்கள்” என விளக்கியிருந்தார் தந்தை பெரியார். இவரைப்பற்றி முதல் அமைச்சரின் கருத்து என்ன? என்று, நிருபர்கள், பதவி ஏற்றவுடனேயே கலைஞரிடம் கேட்டனர். “தந்தை பெரியார் சமூக சீர்திருத்தப் பணிபுரிபவர். அவரது சமுதாய சீர்திருத்த வேலையில் அரசு தலையிடாது. யாருடைய மனமாவது புண்படுவதாகப் புகார் கூறப்பட்டால், அப்போது அரசு கண்காணிக்கும்" என்றார் கலைஞர் 15-3-71 அன்று.

மாபெருந் தலைவரான காமராஜர், நாகர்கோயில் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு தென்மாநிலங்களுக்கும் சிண்டிகேட் காங்கிரசின் ஒரே பிரதிநிதி அவர்தான். அது மட்டுமல்ல சிண்டிகேட், சுதந்தரா, ஜனசங்கம், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சிகளின் கூட்டணிக்கே ஏகப்பிரதிநிதியும் அவரேதான். சேலம் நகராட்சியிலும், பாளையங்கோட்டை நகராட்சியிலும் உள்ள படிப்பகங்களில், பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டது 26-3-71 முதல் இது தவறு எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் ரிட் மனு தாக்கல்