கவிஞர் கருணானந்தம்
571
17-9-71 பெரியாரின் 93-வது பிறந்தநாள் விழா, பெரியாரைத் தந்த ஈரோட்டில் மரியாதை தெரிவிக்க மக்களுக்குச் சரியான வாய்ப்பு! பெரியார் நகரமன்றத்தில் தங்கியிருந்த தந்தைக்கு நல்வாழ்த்துக் கூறி, மாலை சூட்டிட, முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் ப.உ. சண்முகம், ராஜாராம், கண்ணப்பன் ஆகியோர் காலை 10-30க்கு வந்தனர். மாலையில் எல்லாருக்கும் ஈரோடு நகராட்சி மன்றம் வரவேற்பளித்தது. குன்றக்குடி அடிகளார் தலைமையில் முதல்வர் கலைஞர் பெரியார் சிலையினைத் திறந்து வைத்தார். அமைச்சர் ப.உ. சண்முகம் 93 நூறு ரூபாய் நோட்டுகளாக, 9,300 ரூபாய் பொற்கிழி, பெரியாருக்கு வழங்கினார். கி. வீரமணி, அமைச்சர்கள் க. ராஜாராம், மு. கண்ணப்பன் ஆகியோரும் பெரியாரும் உரையாற்றினர். சிலையின் பீடத்தில்; “ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தது யோக்கியமற்ற செயல், இவற்றை நம்புவது மடமை; இவற்றினால் பயன் அனுபவிப்பது வடிகட்டிய முட்டாள் தனம்” என்பதாக ஒருபுறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. 19-9-71 திருச்சியில் பெரியார் கல்வி ஸ்தாபனங்களின் நிறுவனர் நாள் விழாவில், இந்த ஆண்டில் அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் பங்கேற்றார். மறுநாள் பெரியார் சென்னையில், முடிதிருந்துவோர் முன்னேற்றச் சங்க மாநாட்டில் பேசும்போது, “போலீஸ் துறையிலுள்ள எல்லா வேலைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்தே தேர்ந்தெடுக்க வேண்டும். அதே போல மந்திரிப் பதவியில் கூட Rotation முறை கொண்டுவந்து, எல்லாச் சமூகத்தாரும் மந்திரிகளாகின்ற வாய்ப்புத் தரவேண்டும்" என்ற கருத்தைப் புகன்றார்.