பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

572

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


செய்தித்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்த டி.வி, வெங்கட்ராமன் அய்.ஏ.எஸ். அவர்களுக்குப் பதிலாக ஆர். நாகராஜன் நியமிக்கப்பட்டார் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளராக சி.வி. பத்மநாபன் நியமனம் பெற்றார். 26-9-71 அன்று கோவையில் விவசாயப் பல்கலைக் கழகத்தை முதல்வர் கலைஞர் துவக்கினார். அமெரிக்கா வருகை தருமாறு முதல்வருக்கு அழைப்பு வந்திருப்பதாக 25-ந் தேதி செய்தி தரப்பட்டது. எப்போது புறப்படுவார் என்று கூறப்படவில்லை அப்போது!

திராவிடர் மாணவர் கழகம் ஒன்று அவசியம் இருந்திடல் வேண்டுமெனப் பெரியார் கருத்தறிவித்ததற்கிணங்க, 23-9-71 அன்று எஸ். துரைசாமியை அமைப்பாளராகக் கொண்டு, உறுப்பினர் சேர்க்கும் பணி துவக்கப்பெற்றது. மணப்பாறை பகுத்தறிவாளர் கழகத்தில் பெரியார் பேசும்போது - “அரசு ஊழியர்கள் சாதியைப்பற்றிப் பேசினால் கம்யூனல் என்கிறார்கள். சமுதாயத்தைப் பற்றிப் பேசினால் பொலிட்டிகல் என்கிறார்கள். இந்தச் சங்கடமான அவதியில் அவர்கள் எதைத்தான் பேசமுடியும்?” என்று கேட்டார்.

4-10-71 மதுரையில் கூடிய திராவிடர் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில், பெரியார் சிலை அமைப்புக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதே 10,562 ரூபாய் நன்கொடை வசூலாயிற்று. மலேசியாவில் பிணம் புதைக்கும் இடத்தில் ஜாதி வேறுபாடு நடைமுறையிலிருந்ததை எதிர்த்து, அங்குள்ள திராவிடர் கழகம் வழக்குத் தொடுத்ததில், 6-10-71 அன்று, வென்று விட்டது! “பெண்கள் கூந்தலை வகிடு எடுத்து இரண்டாகப் பிரித்திடுவதே மீண்டும் ஒன்றாகப் பின்னுவதற்காகத்தான்! அதுபோல தி.க.வும் தி.மு.க.வும் பிரிந்ததே. மீண்டும் பிணைவதற்காகத்தான்!” என்று முதல்வர் கலைஞர் தஞ்சையில் 8-10-71-ல் பேசினாராம், 17-ம் நாள் சென்னையில், தமிழில் Ph.D. என்னும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற பெரும் புலவர் அனைவரும் ஒன்று கூடிக், கலைஞருக்குத் “தமிழவேள்" என்ற சிறப்புப்பட்டம் வழங்கினர்; Dr. மெ. சுந்தரம் அமைப்பாளராயிருந்து நடத்தினார். சட்ட மன்றத்தில் ஆப்காரி சட்டத்திருத்தம் 23-ந் தேதி கொண்டுவரப்பட்டபோது, ஆதரவாக 121 வாக்குகள்: சுதந்தரா முஸ்லீம் லீக், சிண்டிகேட் உட்பட எதிர்ப்பான வாக்குகள் 19.

"எனது 93-வது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு வீரமணி அவர்கள் கேட்டார். 10 ஆண்டுகளாகவே சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். எனது பிறந்த நாள் என்பதே, பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக, ஓர் ஆதாரமாக விளங்குகிறது என்பது, ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும்.