பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

573



நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவன். அதாவது சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடு படுவேன். நான் எனது பிரச்சாரத்தில். கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காக, அது மூட நம்பிக்கை என்று நல்ல வண்ணம் மக்களுக்கு விளக்குவதற்காகக், கடவுளையே செருப்பால் அடிக்கும் படிச் சொல்லும் அளவுக்கு நான் ஆளாகியிருக்கிறேன். இந்த நிலையிலேயே நான் 92 வயது கடந்து. 93 வயது தோன்றிவிட்டவனாக இருக்கின்றேன். கடவுள் இருந்தால், என்னை விட்டுக்கொண்டு இருப்பானா?

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பன ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும்! இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும்! நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இந்த மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிய மாட்டார்கள். சுதந்தர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது! மடமைக்கும், அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான், கடவுள் மதம் சாஸ்திரம் பார்ப்பனர் என்ற நான்குமாகும்!

சாதி ஒழிய வேண்டும் என்று மனப்பூர்வமாகச் சொல்பவர்கள், இந்த நான்கு ஒழிப்பிற்கும் சம்மதித்தவர்களாகவேதான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்குக் காரணம் ஆகும். எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க பெற்ற பெரிய வெற்றியையும் கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்!

அதாவது, கடவுளைச் செருப்பால் அடித்ததாக 10 லட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்தரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய பலவும் எதிர்ப்பாகப் பாடுபட்டும்; இவ்வளவு பெரிய வெற்றி தி.மு.க. பெற முடிந்தது என்றால், என்னுடைய கருத்து மெய்யாகி வெற்றி பெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி தமது சாதி ஒழிப்புக்கு, மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது. இந்த நிலையில் நான், நமது மக்களை அடிபணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம், கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும்!