பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

576

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இங்கே தரப்பட்ட வெள்ளிச் சிம்மாசனத்தில் பெரியார் உட்காரவைத்தபோது அவர்கள் சிறிது நேரம் தான் அதில் உட்கார்ந்திருந்தார்கள். இந்த சிம்மாசன அமைப்பு வெகு நேரம் உட்காரவைக்க முடியாத ஒன்றாகும். பின்னால் சாயமாட்டார்கள். கைகளை இரண்டு பக்கமும் ஓரளவுக்கு வைப்பார்கள். பிறகு எழுந்து வழக்கமாக அவர்கள் அமரும் சுதந்தரமான இந்த இடத்தில் அமர்ந்து கொள்வார்கள். அவர்களது பொதுவாழ்க்கையே இப்படிப்பட்ட ஒன்றாகும். வெள்ளிச் சிம்மாசனமானாலும், பெரியாரைக் கட்டுப்படுத்தி உட்காரவைக்க முடியாது. பெரியார் அவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது எவராலும் செய்ய முடியாத ஒன்று. அவ்வளவு சுதந்திரமானவர் அவர். அவர் தமிழ் நாட்டிலே இருக்கிற 4 கோடித் தமிழர்களின் இதயச் சிம்மாசனங்களில் என்றென்றும் வீற்றிருப்பவர்.

சிம்மாசனத்திற்குத் தமிழில் அரியணை என்று பெயர். தமிழை அரியணை ஏற்றியவர். தமிழர்களை அரியணைக்குத் தகுதியாக்கியவர். தன்மான உணர்வுகளை அரியணையில் ஏற்றி அமரவைத்த பெருந்தலைவர் அவர்களுக்கு இந்த வெள்ளிச் சிம்மாசனம் மிகச் சாதாரண பரிசாகும். எவ்வளவு பெரிய பரிசுகளை அளித்தாலும் அவரது தொண்டுக்கு எடைக்கு எடை அளித்ததாக ஆகவே முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை லட்சியங்களை நாம் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கின்றோம் என்பதில்தான் அவர்களின் வாழ்வு நீடிப்பு இருக்கிறது. பெரிய ஆலமரமாய் இன்று அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். எனவே அதன் கீழே நிற்கும் நாங்கள் எங்களுக்கு வரும் எதிர்ப்புகளை எல்லாம் துச்சமெனக் கருதுகிறோம்.

பெரியார் அவர்கள் சாவைக் கடந்தவர்கள். பெரியாரின் கொள்கைகள் என்றென்றைக்கும் சாகாதவை. நாட்டில், உலகில் மனிதனுடைய பகுத்தறிவு எதுவரை வேலை செய்து கொண்டு இருக்கிறதோ அதுவரை பெரியார் அவர்கள் வாழ்வார்கள்; வாழ்வார்கள்!

சுயநலம் - பிறநலம் என்ற இருசொற்களுக்கும் பெரியாரைப் போல் இதற்கு முன்போ, பின்போ யாரும் விளக்கமளித்திருக்கவே முடியாது. என்ன நயமான வர்ணனைகள்:- “சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. எந்த ஒரு ஜீவனும் உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் இயற்கையே. ஒவ்வொரு உயிரிடத்தும் சில அருமையான, அற்புதமான குணங்கள் உண்டு என்றாலும், அவையெல்லாம் அந்தந்த உயிரினத்தின் சுயநலத்துக்கேதான் பயன்படுகின்றன. மனிதன் மற்ற உயிர்களைவிட வேறாகிப், பகுத்தறிவு உள்ளவன் எனினும், அவனது வாழ்க்கையும் தன்னலம், புகழை, அடிப்படையாய்க் கொண்டே அமைகிறது.