கவிஞர் கருணானந்தம்
60
நண்பரான - பொறியாளரும் தமிழறிஞருமான பா.வே. மாணிக்க நாயகரும் பல் வகையானும் தேடி அலைந்தார்.
ஏலூரில் தங்கியிருந்த இராமசாமி, தமது ஆதரவாளரான பிள்ளையவர்களிடம் உள்ளதை உள்ளவாறு உரைத்துத், தம் பெற்றோருக்குத் தமது இருப்பிடத்தை அறிவிக்க வேண்டாம் என வேண்டிக் கொண்டார். ஒரு நாள் பிள்ளையவர்களுடன் கடைவீதி வழியே செல்லும்போது, எள் மண்டி சீராமுலு என்பாரின் கடை கண்ணிற்பட்டது. இரத்தத்தோடு ஊறிய வணிக உணர்வு உந்தித் தள்ளிட, இராமசாமி சிறிது எள்ளை எடுத்து, அகங்கையில் வைத்துத் தேய்த்து, மோந்து, பின்னர் அங்கேயே போட்டுவிட்டு, அப்பால் சென்று விட்டார்.
மண்டிக்கடை சீராமுலுவுக்கு மிக்க மனவருத்தம் எள்ளைப் பார்த்து விட்டுக் கொள்முதல் செய்யாமல், ஒன்றுமே பேசாமல் போகிறாரே, இவர் யாரெனச் சுப்பிரமணிய பிள்ளையின் பின்னால் வந்த சேவகனைக் கேட்டறிந்து கொண்டு, தமக்கு அறிமுகமான பெரு வணிகரான வெங்கட்ட நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதி, “உங்கள் சின்னக்கொடுக்கு இராமசாமி, எள் வாங்காமல் போய்விட்ட காரணம் என்ன? என்னிடம் என்ன கோபம்?” என்று கேட்டார்.
துப்புத் துலங்கிவிட்டது! பொங்கும் மகிழ்ச்சியில் பூரித்துப் போனார் வெங்கட்ட நாயக்கர்! பிள்ளைப் பாசத்தால் உள்ளம் மெலிந்தவரன்றோ? உடனே புறப்பட்டார் ஏலூரு நோக்கி! மண்டி சீராமுலுவைக் கண்டு, எல்லாம் விசாரித்தறிந்து, அலுவலர் சுப்பிரமணிய பிள்ளையின் இல்லத்தைத் தெரிந்து கொண்டார். நள்ளிரவு ஆகிவிட்டது, ஆர்வ மிகுதியினால் கதவைத் தடதடவெனத் தட்டினார், முன்புறம் படுத்திருந்த இராமசாமிதான் கதவைத் திறந்தார். தந்தையைக் கண்டதும் ‘திருதிரு’வென விழித்துத், தலை கவிழ்ந்து