பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

637



பிராமணன் - சூத்திரன் என்கிற பேத அமைப்புக்கும் புருஷன் - பொண்டாட்டி என்கிற பேத அமைப்புக்கும் எந்த வித வேறுபாடும் கிடையாதோ உலகத்திற்குப் பயன்படக் கூடிய பேர்பாதி மனித சக்தியைப் பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திய குற்றவாளிகளாகிறோம்..

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால், கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும் இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே, கணவன் - மனைவி உறவு, பெண்ணடிமைத் தன்மை, குழந்தை குட்டிகள் பெறுவது, அவற்றுக்கு எப்படியாவது சொத்துச் சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன.

மந்திரியாகிறவன், கலெக்டராகிறவன் கூடப் பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றும் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கே ஈடுகொடுத்து வந்தால், சமுதாய உணர்ச்சியோ, பொது உணர்ச்சியோ, உலகத்தைப் பற்றிய கவலையோ எப்படி ஏற்படும்?

சாத்திரங்களில் சூத்திரனுக்குக் கலியாண முறையே இல்லை; இதையும் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான்! 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று தொல்காப்பியத்திலேயே கூறப்பட்டிருக்கிறதே பெரும் பகுதி மக்களை உடலுழைப்புக்காரர்களாக ஆக்க, எப்படிச் சூத்திரன் என்று பார்ப்பான் சாத்திரம் செய்தானோ, அதே போலப் பெண்களை அடிமைகளாக்கக், கலியாணம் என்ற முறையையும் ஏற்படுத்தினான். இதனால்தானே வள்ளுவனும் பெண் அடிமைக் கருத்தை எழுதினான்; 'தெய்வந்தொழாஅள கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்று!

நமது புராண இதிகாசங்கள் வலியுறுத்துவது என்ன? ஒரு பெண் பதிவிரதையாக இருப்பதென்றால், அடிமை உணர்வு மிகுதியாக இருக்க வேண்டும் என்பது தானே? ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இல்லாத நாட்டில், சுதந்தரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது? முஸ்லீமை எடுத்துக் கொண்டால், முகத்தை மூடி, உலகத்தில் நடமாட விடுகிறானே பெண்களை - இதை விடக் கொடுமை உண்டா?

நமது பெண்களுக்காவது உணர்ச்சி வரவேண்டாமா? ஜோடித்துக் கொள்வது - சிங்காரிப்பது - சினிமாவுக்குப் போவது - கோயிலுக்குப் போவது - என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் ஆண்களோடு சம உரிமை உள்ளவர்கள் என்கிற உணர்வு வரவேண்டாமா?