பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

640

பகுத்தறிவு பகலவன் தந்தை



19.8.73 தஞ்சை மாநகரில் கோலாகலக் குதூகலப் பெருநாள்; திருநாள் பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல, கருஞ்சட்டையினர் அணிவகுத்து முழக்கமிட்டுப் பின்தொடர், அழகு ஒளி உமிழத் தஞ்சையின் தனிச்சிறப்புப் புகழ் வாய்ந்த முத்துப்பல்லக்கில் பெரியாரும், வீரமணியும் அமர்ந்து வந்த பவனி. பின்னர் திலகர் திடலில் மக்கள் வெள்ளத்தினிடையே மகத்தான பொதுக் கூட்டம். அமைச்சர் எஸ்.இராமசந்திரன் கூட்டத் தலைமை ஏற்றார். தஞ்சை மாவட்டக் கூட்டமெனினும், மாநிலச் சிறப்புப் பொருந்தியதாகையால், வீரமணி வரவேற்கட்டும் எனத் தோலி சுப்ரமணியம் உரைத்திட, வரவேற்புரை நிகழ்த்தினார் “விடுதலை” ஆசிரியரும், கார்நிதி அமைப்பாளருமான வீரமணி. அவர் கேட்டதோ ஒரு லட்சம். ஆனால் திரண்டதோ ஒன்றரை லட்சத்திற்கும் மேல்! மீதியில் 50 ஆயிரம் பெரியாரிடம் நிதியாக வழங்கப்பட்டது. 10 ஆயிரம் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகத் தரப்பட்டது. பெரியார்பால் கரிசனமிக்க மருத்துவ நிபுணர்களான டாக்டர்கள் கே. ராமச்சந்திரா, பட், ஜான்சன் ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. (ஆட்டோமாட்டிக்) தானியங்கிக் கடிகாரம் ஒன்றை விழாக்குழு சார்பில் அமைச்சர் மன்னை நாராயணசாமி பெரியாரிடம் தந்தார். ஒரு டேப் ரிக்கார்டர், தங்கத்தாலான கார் சாவி ஆகியவற்றைப் பெரியாரிடம் தந்து, பொன்னாடையும் , போர்த்தினார் முதல்வர் கலைஞர். ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, வேனிலிருந்தவாறே பேசுவதற்கு ஏற்ற முறையில் இந்த வேனை அமைத்தவர்கள் எல்.ஜி. பாலகிருஷ்ணன் கம்பெனியார். விழாவில் வீரமணிக்கு மோதிரமும், ஓவியர் கருணாவிற்கு நல்லாடையும் பெரியாரால் அணிவிக்கப்பட்டன. வெடி முழக்கங்கள் விண்ணை எட்டின. 95 முறை அதிர் வேட்டுகள் கதிகலங்கச் செய்தன எதிரிகளை. “பெரியார் வாழ்க கலைஞர் வாழ்க! கடவுள் இல்லை ” என்ற எழுத்துக்கள் மத்தாப் பூவாய் எரிந்து ஒளி வீசின. “தோழர்களே! நான் செத்துப் போனாலும் நீங்கள் நினையுங்கள்! என்றைக்குக் கோயில், கடவுள், மதம் இவைகளுக்கு நாம் முழுக்குப் போடுகிறோமோ அன்றே நாம் மனிதர்களாவோம். யாருடைய நெற்றியிலாவது இனிமேல் நாமமோ விபூதியோ இருக்கக் கண்டால், காரித்துப்புங்கள் - அவர்கள் முகத்திலல்ல - கீழே" என்று பேசினார் பெரியார்.

25 -ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில், இந்தப் புதிய வேனில் உள்ள மேடையில் வீற்றிருந்தவாறே பெரியார் பேசினார். “நாமிருக்கும் இந்த தேசம் இந்தியா என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் இந்து என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் இந்து என்பதை ஏற்றுக் கொண்டால், நாமெல்லாரும் தாசி புத்திரர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த இழிவிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி தமிழ் நாடு தனி நாடாவதுதான் என்றார்.