பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

641



28.8.73 காலை 11 மணியளவில் புதிய சபாநாயகர் புலவர் கோவிந்தன், பெரியாரை வந்து சந்தித்து, மாலை சூட்டி, மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார். 30 ந் தேதி காலையில் கூடலூரில் இ.தண்டபாணி (வீரமணியின் அண்ணன் மகள் தேன்மொழிக்கும், ஜெயராமனுக்கும் பெரியார் வாழ்க்கை ஒப்பந்தம் நடத்தி வைத்தார். மாலையில் "கலைஞர் கருணாநிதி குழந்தைகள் நூலக”த்தைத் திறந்து வைத்தார். 1.9.73 அன்று, திருச்சியை அடுத்த கரூரில், பெரியார் "இளைஞர்களே!" எதிர் காலம் உங்களுடையது. அதனால் நீங்கள் எதையும் முன்னோக்கியே பார்க்கப் பழகுங்கள். தாய் தந்தையாரே மூட நம்பிக்கைக் கருத்துக்களைச் சொன்னால், பணிவோடு அவற்றை உதாசீனப்படுத்துங்கள்! " என்று புதுமையுரை புகன்றார்.

“ஏற்கனவே சலவை செய்து போட்ட துணிகளை அலமாரியிலிருந்து எடுத்து, நாளாகி விட்டதே என்று மீண்டும் சலவைக்குப் போடுவோம்" என்று இடத்திற்குப் பொருத்தமான உவமை ஒன்றைக் கலைஞர், பேரறிவுத் திறனோடு கூறியிருந்தார். 26.8.73 அன்று நடந்த சலவையாளர் முன்னேற்ற சங்க மாநாடு அது. சமுதாயத்திலும் கல்வியாலும் பிற்படுத்தப்பட்டுக்கிடக்கின்ற சமுதாயம், அது எவ்வளவுதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், ஏற்கனவே மேல் மட்டத்துக்கு வந்து, கல்வியால் சமூக அமைப்பால் உயர் அந்தஸ்தில் இருக்கிற வகுப்பாருடன் சமநிலை எய்திட முடியாது என்பதை - முதல்வர் கலைஞர் வெகு அற்புதமாக எடுத்துக் காட்டினார். அந்த அடிப்படையில் ஆழமான நம்பிக்கையோடு அவர் காரிய மாற்றினார். 'முற்பட்டோரும் முதல்வர் பதிலும்' என்ற தலையங்கத்தின் வாயிலாக "விடுதலை" 1.9.73 ஏட்டில், ஆசிரியர் இக்கருத்துகளையும், முதல்வர் தந்த புள்ளி விவரங்களையும் அழகுற எடுத்துக் காட்டினார். இந்த ஆண்டு 16, 17 தேதிகளில் பெரியாரின் 95 வது பிறந்தநாள் விழாக்கள் சென்னையில் நடைபெறும்; மதுரை விழாக்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு 3.9.73 அன்று வெளிவந்தது.

பெரியாரின் தலையங்கம் ஒன்றும் அதே நாளில் பிரசுரமானது: “இந்தியாவில் உழைப்பாளி - சுகபோகி" என்று இரண்டு வகுப்புகள் இருக்கின்றன. இவை பெரிதும் ஏழை - பணக்காரன் என்ற சமுதாயப் பிரிவுகளைப் பரிணமிக்கச் செய்கின்றன. உண்மையாக சமதர்மம் இந்தியாவில் நிலைநாட்டப்பட வேண்டுமானால், உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று. இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று, என்று இருப்பதைக் கிள்ளி எறிய வேண்டும். நம் நாட்டின் சமூகப் பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும், பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும்'.