பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

670

பகுத்தறிவு பகலவன் தந்தை



உங்கள் கடமை என்றால், உங்கள் ஒருவரைப் பொறுத்தல்ல, தமிழர் என்று சொல்லுகிற நாம் இத்தனைக் கோடி மக்களையும் பொறுத்தது. பிறகு நாம் வட்டியும் முதலுமாய் உயரலாம். ஒன்றும் தேங்கிப் போகாது. நம் நாட்டு முன்னேற்றம் - என்று உங்களை வணக்கத்தோடெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்த ஏற்பாடு பண்ணி, இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்ததற்கெல்லாம், என்னைக் காது கொடுத்துக் கேட்டதற்கு, என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு, என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

வணக்கம்!”

கூட்டம் முடிந்து இல்லந் திரும்பினார் பெரியார். படுக்கச் சென்றவருக்கு வலி அதிகமாக இருந்திருக்கிறது. நள்ளிரவுக்கு மேல் சுமார் 2.30 மணியிலிருந்த தாங்க முடியாமல் இருந்த நோயை, மிகவும் சிரமப்பட்டுத் தாங்கிப் பொறுத்துக் கொண்டு, பொழுது விடிந்த பிறகு சொல்லலாம்; அதற்குள் ஏன் பிறரைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கிறார். ஆனால் 4.30 மணியளவில், வலி அவரது சக்திக்கும் பொறுமைக்கும் மீறிப் போனதால், மெல்லத் தயக்கத்துடன் வெளியில் சொன்னார். உடனே டாக்டர் கே. ராமசந்திராவுக்கு ஃபோன் செய்து வரவழைக்கப்பட்டார். டாக்டர் சரத் சந்திராவும் வந்து பார்த்தார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்குப் பெரியார் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு 21 ந்தேதி வர இயலாதென்று தந்தி கொடுத்துவிடலாம் என்று வீரமணியும் சம்பந்தமும் சொன்ன போது "அதெல்லாம் கூடாது. நீங்களா பேசப் போகிறீர்கள்? நான்தான்! அவசியம் போக வேண்டும்” என்றார் பெரியார்..

“மருத்துவமனையில் தந்தை பெரியார், சென்னை டிசம்பர் 21. நேற்று காலை முதல் இரணியா நோய்த் தொல்லையால் அவதிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், முதலில் சென்னை பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்கள். பின்னர், இன்று அவர்களின் விருப்பப்படியே, வேலுரில் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். டாக்டர் எச்.எஸ். பட் அவர்கள், பெரியார் அவர்களுக்கு ஒய்வு தேவை என்று கூறுவதால், திருவண்ணாமலை, திருப்பத்தூர் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தோழர்கள் பொறுத்தருள வேண்டும்” இதுதான் முதலில் வெளியான செய்தி, டிசம்பர் 22 ம் நாள் பெரியாருக்கு வலி குறைந்து உடல்நிலை தேறி வருகிறது என்று தகவல் தரப்பட்டது.

ஆனால் 22.12.73 இரவு பெரியாருக்கு வலி மிகுந்து விட்டது. தூக்கமில்லாமல் அவதிப்பட்டார். டாக்டர் பட்டும், டாக்டர்