69
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
ஈரோட்டிலுள்ள எழில் தவழும் வ.உ.சி. பூங்காவின் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியில் ஈ.வெ. ராமசாமியின் பெயர்தான் பொலிகின்றது! இவ்வளவு நன்மைகள் செய்தும் ஈரோட்டுப் பார்ப்பன மாந்தர், இவர் இப்பதவிக்குத் தகுதியில்லாதவர்; இவரை நீக்கிடல் வேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் விடுத்தனர். பாதிக்கப்பட்ட சில பாதிரியார்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலிடத்தார் நேரில் வந்து விசாரணை நடத்தியபோது, ஈரோடு நகரத்தில் பொதுநலன் பேணும் கவுரவப் பதவிகள் அனைத்தும் ஈ. வே. ராமசாமியைத் தாமே தேடிவந்து தஞ்சம் புகுந்ததில், அவர் அப்போது வகித்துவந்த பதவிகளின் எண்ணிக்கை இருபத்தொன்பது என்பது தெரியவந்தது. அதனால், மிக உறுதியுடன் இராமசாமியே தலைவராயிருக்கத் தக்கவர் என்று கூறிப் பழி கூறியோர் முகத்தில் கரிபூசிச் சென்றனர்.
ஈ.வெ. ராமசாமி ஈரோடு நகர்த்தலைவராயிருந்தபோது, இவரை விட ஒரு வயது மூத்தவரும், வழக்கறிஞருமான சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் சேலத்தில் தலைவராக வீற்றிருந்தார். பக்கத்திலுள்ள பெரிய நகரமாதலால், இருவரும் அடிக்கடி சந்தித்து, அளவளாவி, நட்புப் பூண்டனர். ஈ.வெ. ராமசாமியின் ஆட்சித்திறன் இராசகோபாலாச்சாரியைக் கவர்ந்தது. அவரும், அவரது நெருங்கிய சகாக்களான டாக்டர் பி. வரதராசலு நாயுடுவும் திருவாரூர் தமிழ்த் தென்றல் வி. கல்யாண சுந்தர முதலியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையும் அப்போது காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.