பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஈரோட்டிலுள்ள எழில் தவழும் வ.உ.சி. பூங்காவின் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியில் ஈ.வெ. ராமசாமியின் பெயர்தான் பொலிகின்றது! இவ்வளவு நன்மைகள் செய்தும் ஈரோட்டுப் பார்ப்பன மாந்தர், இவர் இப்பதவிக்குத் தகுதியில்லாதவர்; இவரை நீக்கிடல் வேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் விடுத்தனர். பாதிக்கப்பட்ட சில பாதிரியார்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலிடத்தார் நேரில் வந்து விசாரணை நடத்தியபோது, ஈரோடு நகரத்தில் பொதுநலன் பேணும் கவுரவப் பதவிகள் அனைத்தும் ஈ. வே. ராமசாமியைத் தாமே தேடிவந்து தஞ்சம் புகுந்ததில், அவர் அப்போது வகித்துவந்த பதவிகளின் எண்ணிக்கை இருபத்தொன்பது என்பது தெரியவந்தது. அதனால், மிக உறுதியுடன் இராமசாமியே தலைவராயிருக்கத் தக்கவர் என்று கூறிப் பழி கூறியோர் முகத்தில் கரிபூசிச் சென்றனர்.

ஈ.வெ. ராமசாமி ஈரோடு நகர்த்தலைவராயிருந்தபோது, இவரை விட ஒரு வயது மூத்தவரும், வழக்கறிஞருமான சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் சேலத்தில் தலைவராக வீற்றிருந்தார். பக்கத்திலுள்ள பெரிய நகரமாதலால், இருவரும் அடிக்கடி சந்தித்து, அளவளாவி, நட்புப் பூண்டனர். ஈ.வெ. ராமசாமியின் ஆட்சித்திறன் இராசகோபாலாச்சாரியைக் கவர்ந்தது. அவரும், அவரது நெருங்கிய சகாக்களான டாக்டர் பி. வரதராசலு நாயுடுவும் திருவாரூர் தமிழ்த் தென்றல் வி. கல்யாண சுந்தர முதலியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையும் அப்போது காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இங்கிலாந்தில் நிறுவப்பட்ட கிழக்கு இந்தியக் கம்பெனி கி.பி. 1600-ல் இந்தியாவுக்கு வாணிபம் செய்வதாக வந்து, நுழைந்து, படிப்படியாக உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலை யிட்டு, நாடுகளைக் கைப்பற்றி வந்தது. கி.பி. 1784-ல் இந்தப் பகுதிகளை இங்கிலாந்து அரசே நேரடியாக ஆளத் தொடங்கியது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை அவ்வப்போது இந்தியாவில் எதிர்த்துச் சில கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன. 1885-ஆம் ஆண்டு பம்பாயில் இந்திய தேசியக் காங்கிரஸ் என்னும் அமைப்பை ஹியூம் என்ற ஆங்கிலேயர் தோற்றுவித்தார். இந்தியன் நேஷனல் காங்கிரஸ் - அதாவது இந்தியச் சாதியாரின் சபை என்று வைக்கப்பட்ட பெயர், பிறகுதான் இந்திய தேசிய மகாசபை என மாற்றிக் கொள்ளப்பட்டது. படிப்படியே இந்தியர்களுக்கும் உத்தியோகங்கள் தரப்பட வேண்டும் என்பதே இதன் கோரிக்கை. 1929-ல் தான் சுயராஜ்யக் கோரிக்கை முதன் முதலாக உருவாகியது. காங்கிரஸ் இயக்கம் வளரவே. 1909-ல் மிண்டோமார்லி சீர்திருத்தம், 1919-ல் மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆகியவை ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டது.