பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிபற்றிய சிந்தனைகள்

163



(2) குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சிபெறுவார்கள். அரசியல், சமூக அறிவு, பொருளாதார அறிவு ஆகிய அனைத்துத் அதில் அடங்கியுள்ளன.

(3) மனிதச் சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பெற்ற நூல்தான் திருக்குறள். எனவேதான் எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் “எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக்கொள்ளும் குறள்” என்றெல்லாம் அதனைப் போற்றி வருகின்றனர்.

(4) வள்ளுவரையும் நாம் ஒரு மனிதராக மதித்தே மக்களிடையே காணப்படும் இழிவுநீங்கி மனிதத்தன்மை வளர்ந்தோங்க வேண்டும் என்ற கருத்தோடு பாடுபட்ட ஒரு பெரியாராக மதித்தே நாம் குறளை ஒப்புக்கொள்ளுகிறோமே ஒழிய அதை நாம் கடவுள் வாக்காகவோ, அசரீரிவாக்காகவோ ஏற்றுக்கொள்ளவில்லை.

(5) நீங்கள் என்ன சமயத்தார் என்று கேட்டால் ‘வள்ளுவர் சமயத்தார்’ என்று சொல்லுங்கள்; உங்கள் நெறி என்ன என்றால் ‘குறள் நெறி’ என்று கூறுங்கள்; அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்கு வாதியும் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரரும் எதிர்நிற்கமாட்டார்; யாரும் குறளை மறுக்கமுடியாததே இதற்குக் காரணம்.

(6) குறளாசிரியர் கடவுளையும் மோட்ச நரகத்தையும் ஒத்துக்கொள்ளவில்லை. குறளில் அறம், பொருள், இன்பம் என்ற அளவில் காணமுடியுமே தவிர வீடு மோட்சம்பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை. கடவுள்வாழ்த்து என்ற ஓர் அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கை இடம்பெற வில்லை. ‘கடவுள்’ என்ற சொல்லே கடவுள்வாழ்த்து அதிகாரத் தில் இடம்பெறவில்லை. வள்ளுவர் கடவுள்வாழ்த்து பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியே நடக்கவேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார்... மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துகளை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்து கூறியுள்ளார்.

(7) அறிவு பெற்றவன் அறிவையே முதன்மையாகக் கொண்டவன்; ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சி தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான்; குறளைப் பாராட்டியே