பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தந்தை பெரியார் சிந்தனைகள்



தீருவான்; சிறிதாவது பின்பற்றிக் குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான்.

(8) குறள்பக்தி நூலல்ல; கடவுளைக் காட்டும் எந்தவிதமான மத நூலல்ல; மதப்பிரச்சாரம் செய்யும் மதக்கோட்பாட்டு நூல்அல்ல... உண்மையான ஒழுக்கத்தை அதாவது யாவருக்கும் பொருந்தும் சமத்துவமான ஒழுக்கத்தைப் போதிப்பதாக இருக்கிறது குறள்.

(9) குறள் வெறும் ஒழுக்கத்தையும் வாழ்க்கைக்கு வேண்டிய அநுபவப்பூர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.

(10) குறள் ஓர் அறிவுக்களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பெற்ற நூல் திருக்குறள். பார்ப்பனரின் பித்தலாட்டங்களை வெளியாக்குவதற்கென்றே எழுதப்பெற்ற நூல். ஆகவே வள்ளுவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்திருக்கவேண்டும். நூலின் ஒவ்வொரு செய்யுளும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தன்மையை விளக்குகின்றது.

இங்கனம் குறளைப்பற்றி ஏராளமான கருத்துகளைக் கூறுகின்றார். விரிவஞ்சி அவை தவிர்க்கப்பெறுகின்றன.

2. சிலப்பதிகாரம்: தமிழ்நாட்டுக் கதையை துறவுநிலையிலுள்ள தமிழரால் எழுதப்பெற்றது. இதனைப்பற்றிப் பெரியாரின் சிந்தனைகள்:

(1) தமிழ்ப்புலவர்கள் மிகச்சிறப்பான இலக்கியம் என்று சொல்லக்கூடிய சிலப்பதிகாரத்தில் ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டத் தீவலம் சுற்றி’ என்று வருவது பார்ப்பான் வந்தபின் இயற்றிய இலக்கியம் என்பதற்குச் சான்றாகும். தமிழ் இலக்கியங்கள் யாவும் பார்ப்பான் வந்தபின் இயற்றப்பட்டனவே யாகும். தமிழனுக்கென்று தனித்த இலக்கியம் தமிழில் ஒன்றுகூட இல்லை.

(2) சிலப்பதிகாரக் கதையில் ஒரு பெண்ணைப் பதிவிரதையாக்கவேண்டும் என்பதற்காக உலகத்திலுள்ள முட்டாள்தனத்தையெல்லாம் கொண்டுவந்து புகுத்தியிருக்கிறான். சாமி மட்டுமல்ல, பார்ப்பான், பேய், பிசாசு இவை வந்துள்ளன. அரசனை முட்டாளாக்கியுள்ளன. பசுமாடு, பார்ப்பான் இவர்களை நீக்கிவிட்டு நாடு பூராவும் தீயில் எரியவேண்டும் என்று சாபம் இட்டிருக்கின்றாள் (கண்ணகி). இதனால் எல்லாம் நம் தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் என்ன இருக்கிறது?