பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

111

இதுபற்றியன்றே இம்மறவர் வாழ்ந்த பழையவூரைக் கரந்தை எனவும், இவரைக் கரந்தையர் எனவும், இவர் தலைவனைக் கரந்தையர்கோன் எனவும் பிற்காலக் கவிகள் வழங்குவாராயினர் எனக் கொள்க. “மல்லார் கரந்தை ரகுநாதன் றேவை வரையில்” (ஒரு துறைக்கோவை-68) “கரந்தையர்கோன் ரகுநாதன்” (ஷெ 62-76) என்று வருதல் காண்க. இவ்வகை மறவரே இத்தமிழ்நாட்டு மூவேந்தரருக்கும் சிறந்த பெரும்படையும் படைத்தலைவருமாய் விளங்கினோராவர்.

இவ்வீரரே இம்மூவேந்தரையுந் தமது அரிய பெரிய வெற்றித்தொழில்களால் மகிழ்வித்து, அவரான் முடியுங் கோலும் மாலையும் பிறவும் அளிக்கப்பெற்றுக் குறுநில மன்னராய், அப்பேரரசர்க்குப் போர்த்துணைவராய் விளங்கினோராவர். இவர் இம்மூன்று தமிழ்வேந்தர்க்கும் உரியராதல் பற்றி முற்காலத்தே சேரன் மறவர், பாண்டியன் மறவர், சோழன் மறவர் என மூன்று பகுதியினராக வழங்கப் பட்டனர்.

நன்னன். ஏறை, அத்தி, கங்கன், கட்டி முதலாயோர் சேரன் மறவர் (அகநானூறு. 44) கோடைப் பொருநன் ஆகிய பண்ணி முதலாயோர் பாண்டியன் மறவர் (அகம், 13). பழையன் பண்ணன் முதலாயோர் சோழன் மறவர் (அகம், 44, 326. புறம், 1:3). இவரைச் சோழன் மறவன், பாண்டியன் மறவனென வேறு வேறு கூறுவதும் காண்க. இம்மறவராகிய படை வீரர் குறுநில மன்னராயிருந்தனர் என்பது “தானே சேறலுந் தன்னொடு சிவணிய, சேறலும் வேந்தன் மேற்றே” (சொல். பொ. அகத். 28) என்னுஞ் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் “சொற்றச் சோழர் கொங்கர்ப் பணி இயர், வெண்கோட்டியானைப் போர்க் கிழவோன், பழையன் வேல்வாய்த் தன்ன” எனவரும் நற்றிணையை எடுத்தோதி, இது குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது;