பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

துவக்கவும், சில குடிசைத் தொழில்களைத் துவக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மலைவாழ் மக்கள் நல்ல காற்றுள்ள இடங்களில் வாழ்ந்துவந்த போதிலும், நல்வாழ்வு நடத்தவில்லை. மலேரியாக் காய்ச்சலினால் இவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். இதனால் பலர் ஆண்டுதோறும் இறந்துவிடுகின்றனர். நீலகிரி மலையிலுள்ள தோடர்கள் தோல்நோயினால் பீடிக்கப்பட்டு ஆண்டுதோறும் மக்கள் தொகையில் குறைந்துவந்தனர். நீலகிரி மாவட்டப் பழங்குடி மக்களுக்காக ஒரு நடமாடும் மருத்துவமனை {mobile dispensary) இயங்கிவருகின்றது. மலைவாழ் மக்கள் இருக்கும் எல்லாப் பகுதிகளுக்கும் இம்மருத்துவமனை சென்று பணிபுரிவதன் மூலம் தோடர்களிடையே பரவிவந்த தோல்நோய் அறவே நீங்கிவிட்டது. கொயினா மருந்து எல்லாருக்கும் வழங்குவதன் மூலம் மலேரியாவும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பழங்குடி மக்கள் தண்ணீர் நிறையக் கிடைக்கக் கூடிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த போதிலும், தூய்மையான குடி தண்ணீர் கிடைக்காமல் வருந்துகின்றனர். எனவே எல்லா மாவட்டங்களிலுமுள்ள மலைவாழ் மக்களுக்குக் குடி தண்ணீர் வசதிகள் செய்வதற்காக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ 80,000 ஒதுக்கப் பட்டிருக்கின்றன.

மலைவாழ் மக்கள் சிறுகுடிசைகளில் குடியிருக்கின்றனர். அக்குடிசைகள் விலங்குகளும் தங்கமுடியாதபடி மிகவும் கேவலமான நிலையில் உள்ளன. நல்ல குடியிருப்புகள் இல்லாமல் அவர்கள் நலத்துடன் வாழ்வது எப்படி? ஆகவே வீடுகள் கட்ட ரூ 5.53 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ 900 செலவிட முடிவு செய்துள்ளனர்.