பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179

எல்க் சிகரம் :

எல்க் சிகரம் 8000 அடிகளுக்கு மேல் உயரமுள்ளது. இதன்மீது பல கோயில்கள் உள்ளன. இவ்வுச்சியின் பக்கத்தில் ஓர் அழகிய கோயில் குடையப்பட்டுள்ளது. அங்குள்ள பூசாரி மாலைதோறும் ஒரு விளக்கேற்றி வைக்கிறார். ஊட்டியின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் அவ்விளக்கு நன்றாகத் தெரியும்.

கெய்ரன் சிகரம் :

எல்லாவற்றையும்விட மிகவும் அழகியது கெய்ரன் சிகரம் (Cairn Hill). மற்ற எல்லாச் சிகரங்களையும் விட இது மரங்களடர்ந்தது. நல்ல வேளையாக, மற்ற சிகரங்களில் மரங்கள் அழிக்கப்பட்டாற்போல் இதில் அழிக்கப்படவில்லை . இதன் உயரம் 6,583 அடி. பச்சைக் கம்பளம் பரப்பினாற் போன்ற புல்வெளிகள் இச்சிகரத்தில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. இங்குள்ள மரங்களின் அடியில் மேடையிட்டாற்போல் பாசி படர்ந்துள்ளது. அதன்மீது இலக்கிய உணர்வுள்ள யாரேனும் தனிமையில் அமர்ந்திருந்தார்களானால், ஜோகன் ஸ்ட்ராஸ் (Johan Strause) என்ற மேலை நாட்டுக் கவிஞனின் உள்ளத்தில், அமரத்வம் பெற்ற இசைப் பாடல் உருவாகுமாறு தூண்டிய, வியன்னாவின் இளமரக்காடுகள் நினைவில் தோன்றும், கெய்ரன் சிகரம் உதகையிலிருந்து சற்றுத்தொலைவில் உள்ளது. நகரத்திலிருந்து புறப்பட்டு, ஏரியைச் சுற்றிச் செல்லும் புகைவண்டிப் பாதையோரமாகச் சென்றோமானால், தூண்கள் போல் உயர்ந்து நிற்கும் பாறைகளைக் காணலாம். அவ்விடத்திலிருந்து ஒரு கல் தொலைவு மிகவும் மோசமான பாதை அமைந்துள்ளது, அதைக் கடந்துவிட்டால், கெய்ரன் மலையின் இளமரக் காட்டிற்குள் நுழையலாம்.