பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

மாகச் சில கேள்விகளைக் கேட்டார். கூடுமானவரை நல்ல விடையே கூறினேன். என் அறிவு எனக்குத் தானே தெரியும். மேலும் அவர் கேட்டால் விழிக்க வேண்டி நேரும். ஆசிரியர் நற்சான்றிற்கு மாசு நேரக் கூடும் என்பதால் கவியரசை விட்டு ஓடி விடத் திட்டமிட்டு அவரிடம் ஓர் ஐயம் எழுப்பினேன். தொல்காப்பியர் எழுவாய் வேற்றுமைக்கு பெயர் தோன்று நிலையே என்றார். அதாவது சொல் எல்விதத் திரிபும் இல்லாமல் இருப்பது. அவ்வாறு கூறிய அவரே 'நீயீர்' என்ற எழுவாய்ச் சொல்லுக்கு இலக்கணம் கூறும் போது 'நும்மின் திரிபெயர்’ என்று கூறியுள்ளார். இது முன் கூறிய இலக்கணத்திற்கு முரண் ஆகாதா? நும்மின் திரி பெயராகிய நீயிர் என்பது பிற வேற்றுமைகளை ஏற்கும் போது மீண்டும் நும் எனத் திரிந்து, 'நும்மை நும்மால்' என ஆவானேன் என்ற இரு ஐயங்களை எழுப்பினேன். அவர் சிந்திக்கத் தொடங்கி விட்டார். விட்டால் போதும் என ஓடிவிட்டேன்.

பள்ளியில் மற்றொரு தமிழாசிரியர் திரு. பாலசுந்தர நாயகர் அவர்கள் வித்துவான் தேர்வில் வெற்றி பெற்றார். அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த தலைமை ஆசிரியரின் அனுமதி கேட்டோம். அவர் மறுத்து விட்டார். பானுகவி மாணவர் கழகமும் விழா நடத்த முன்வரவில்லை. அதனால், ஒளவைத் தமிழ் மாணவர் கழகம் என்ற புதிய கழகத்தைத் தொடங்சி அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவினை நடத்தினோம்.

ஓராண்டு கழிந்தது: 1936 இல் முதலாண்டு விழா நடத்த முடிவு செய்தோம். விழாத் தலைமைக்கு மறைமலை அடிகளாரை அழைக்க முடிவு செய்தோம். ஆசிரியர் ஒளவை அவர்கள் அவருக்கு கடிதம் எழுத, அடிகளார் ஒரு நாளைக்கு 100 வெண்பொற்காசுகள் (அதாவது ரூபாய்) தர வேண்டும் என்றும் உணவு இவ்வகையில் இருக்க வேண்டும் என்றும் பதில் எழுதி விட்டார்.


த-11