பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை; ஆனாலும் மறைமலையாரை அழைக்கும் ஆசையும் குறையவில்லை. ஒருநாள் ஆசிரியர் அவர்களிடமும் சொல்லாமல் பல்லாவரம் சென்று, அரைக்கிலோ கற்கண்டு, 2 சீப்பு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, மலர்மாலை இவற்றை வாங்கிக் கொண்டு, அடிகளார் மாளிகை சென்று ஒரு தட்டு வாங்கி அதில் இவற்றை வைத்து எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவர் கையில் தட்டைக் கொடுத்து விட்டுக் காலில் வீழ்ந்து வணங்கினேன். (நான். வணங்கிய முதல்வர் அவர் தான்)

வாழ்த்தி எழுந்திருக்கப் பணித்துவிட்டு: யார்? வந்தது ஏன் என வினவினார்:அழைக்க வந்தேன் என்றேன். ஔவைக்கு கடிதம் எழுதி விட்டேனே என்றார். கையில் இருப்பது 200 வெள்ளிக்காசுகள் தாம் என்றாலும் தாங்கள் வந்து விழாத் தலைமை தாங்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். ஒப்புக் கொண்டார். 1936 மே 24, 25, 26 ஆகிய நாட்களில், திருவத்திபுரம். எங்கள் தெருவில், கோயிலை அடுத்து, தெருவை அடைத்து பெரிய பந்தல் போட்டு விழா நடத்தினோம்.. வித்துவான் பட்டம் பெற்ற பின்னர், பி.ஓ.எல். பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. கல்லூரி சென்று படிக்காமல் வீட்டிலிருந்தே தேர்வு எழுதுவதானால் 3 ஆண்டு ஆசிரியராகப் பணி புரிந்திருக்க வேண்டும்; தேர்வுக்கு மனுச் செய்யும் போது ஆசிரியராக இருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழக விதி; அதனாலும், இரண்டாம் உலகப் போர் காரணத்தால் அறிஞர் அண்ணா உள்ளிட்ட கழகத்தவர் அனைவரும் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா அணிக்கு ஆதரவான பிரசாரம் செய்ய முனைந்து விட்டனர்; அதனாலும், வேலூரில் என் பழைய தமிழாசிரியர் சென்ற அதே பள்ளியில் ஆசிரியராக 1942-இல் சேர்ந்தேன்.1944 வரை பணி புரிந்தேன். அங்கும் தமிழ்ப்பணி தொடர்ந்தது.