பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


இளவெளிமான் தன் அண்ணன் போல, அள்ளி வழங்கும் குணமோ, புலவர்தம் தகுதி அறியும் அறிவோ உடையான் அல்லன்; அதனால் புலவர்க்குச் சிறிதே பொருள் கொடுத்தான்; தம் தகுதிக்குக் குறைவானது அது என உணர்ந்த புலவர் அதை வாங்க மறுத்துவிட்டு, நேரே குமணன் பால் சென்று அவன் புகழ் பாடினார். அது கேட்டு மகிழ்ந்த குமணன், "வேண்டும் பரிசில் யாது. யாதாயினும் தருகின்றேன்" என்றான். புலவர், "அரசர்களும் மதிக்கும் வண்ணம், நான் பெரிய யானை மீது அமர்ந்து செம்மாந்து செல்ல விரும்புகின்றேன்,115 என்றார்; அது கிடைத்து விட்டது, அதன்மீது அமர்ந்து விடைபெற்றுக் கொண்டு நேரே. இளவெளிமான் ஊருக்குச் சென்று, அவன் காவல், மரத்தில், யானையைப் பிணித்துவிட்டு வாயிற்காவலன் மூலம், இளவெளிமானை அழைத்து "இளவெளிமான்! உன் காவல் மரத்தில் பிணித்திருக்கும் களிறு, குமணன் கொடுத்த கொடைநலம்!" எனக் கூறிவிட்டு வெளியேறி விட்டார்.116

இவ்வொரு நிகழ்ச்சியே போதும், குமணனின் கொடை வளத்தை அறிய : மற்றுமொரு நிகழ்ச்சி, அவனைக் கொடை வள்ளல்களுக்கெல்லாம் தலைமை வகிக்கவல்ல தகைமைசால் கொடைவள்ளல் என்பதைக் காட்டுவதாய் அமைந்துவிட்டது.

குமணனுக்கு ஒரு தம்பி; இள்ங்குமணன் என்பது அவன் பெயர், கொடியவன்; அண்ணனைக் கொன்று அரசாளத் துணிந்துவிட்டான். அஃது அறிந்த குமணன் தலைமறைவாகி—விட்டான். ஆயினும், இளங்குமணன் முயற்சியைக் கைவிட்டான் அல்லன். "குமணன் தலையைக் கொணர்வோர்க்குக் கோடிப்பொன் பரிசு," எனப் பறை அறைந்து விட்டான்.