பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

ஆற்ற வேண்டியவராயினர் எனல் அத்துணைப் பொருத்தம் உடைத்தன்று ஆதலால், சேரர் படைத் தலைவனாய்ப் பணியாற்றினவன் அல்லன் இந்நன்னன். இவன் வேறு; அவன் வேறு என்றே கொள்வது பொருத்தமுடையதாகும்.

நன்னனுக்குரிய ஊர்களுள், கடம்பின் பெருவாயில் என்பதும் ஒன்று. சேரர் பகைவருள் கடம்பர் என்பாரும் ஒருவர். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும், இளஞ்சேரல் இரும் பொறையும், கடம்பின் பெருவாயில் நன்னனை வென்று அழித்தனர் என்று கூறப்படுகிறது.138 இதனால், நன்னன், அக் கடம்பரோடும் யாதோ ஒரு வகையான் உறவுடையவனாவன் என்பது தோன்றுகிறது.

"பொலந்தேர் நன்னன் மருகன் அன்றியும், நீயும் முயங்கற்கு ஒத்தனைமன்"139 என்ற புலவர் பெருந்தலைச் சாத்தனார் பாடல் வரிகள் மூலம் விச்சியர்140 என்ற இனத்தைச் சார்ந்த இளவிச்சிக்கோ எனும் இளவரசன் ஒருவன், நன்னன் வழி வந்தவனாவன் என்பது புலனாகிறது.

"இளவிச்சிக்கோ" எனும் சொல், 'இளவிச்சிரக்கோ' என்பதன் திரிபாதலும் கூடும் என்று கொண்டு. நன்னன் சோணை நதிக்கரையில் உள்ள தேயமான வச்சிர நாட்டினின்றும் வந்தோர் வழியினாதல் வேண்டும் என்பாரும் உளர். இவை ஆய்ந்து அறிய வேண்டியன ஆகும்.

நன்னன், தேர்ப் படை, யானைப் படை, வேற்படை போன்ற பெரும்படை கொண்டிருந்தான்141 அடிப்படை வலிமை கொண்டு சிற்றரசுகள் பலவற்றை அழித்தான். அந்நாடுகளின் பொருள்களை அள்ளி வந்தான்142