17
‘அமிழ்தினும் அரிய’ தென்றிவ்
வகிலமா ராய்ந்து போற்றும்
தமிழ்திரு நாட்டில் தோன்றித்
தமிழராய் வாழ்ந்தும், தம்பால்
கமழ்தரும் கல்வி, செல்வம்
காணாரைக் கடைய ராக்கி
உமிழ்ந்ததம் பலம்போ லொட்டா
தொதுக்கினா ருயர்ந்தோ’ ரென்பர்.
வலையரென் றொதுக்கப் பட்டார்
வளநெய்தல் நிலத்தி னோர்கள்;
புலையரென் றொதுக்கப் பட்டார்
புகழ்மரு தத்தி னோர்கள்;
மலையரென் றொதுக்கப் பட்டார்
மல்குபூங் குறிஞ்சி மக்கள்;
கொலைஞரென் றொதுக்கப் பட்டார்
கூர்ம்பரல் பாலை வாழ்நர்!
ஆரியர்க் ககத்தைத் தந்தோர்
ஆத்திக ரானார்; அல்லார்,
பூரியா், புலைய ரென்றே
பொறுப்பின்றி வெறுக்கப் பட்டுச்
சேரிய ரானார், செல்வம்
சேர்த்திட இயலா வாறிப்
பாரியல் தமிழர் வாழ்வு
பழங்கதை யாயிற் றின்று!
துடிக்கின்ற மீசை போச்சு;
துட்டரின் கன்னம் வீங்க
இடிக்கின்ற வீரம் போச்சின்
றில்லாதார்க் கிரங்கி வாரிக்
கொடுக்கின்ற ஈகை போச்சு;
குறிக்கோளாய்ப் புறநா னூறு
படிக்கின்ற பழக்கம் போச்சு;
பண்பாடும் பாழாய்ப் போச்சு!