27
6 மணியய்யன் முயற்சி
இங்கித மின்றிப் பேசி
இயல்பழிந் திதய மேங்கி,
அங்கிருந் தெழுந்து வந்த
ஆற்றல்சா லய்யன் குந்திக்
கங்குலும் பகலுங் கன்றிக்
கவலையி லாழ்ந்தான், ‘கல்லாச்
செங்கனின் வரவால் எல்லாம்
சீர்கெட்டு விட்ட’ தென்றே.
தொந்திர வொன்று தோன்றித்
தொடருங்கால், துணையா கின்ற
தந்திரச் சரக்குப் பையாய்த்
தமதுநல் வாழ்வின் மூல
மந்திர மாயத் திற்கு
மறைப்பேழை யாகி மல்கும்
சிந்தனைத் திறனால், செய்யும்
செயலினைத் தேர்ந்தான் சீராய்!
அம்புக்குத் தப்பிச் சென்ற
அருமைமா னதனை யன்றே
‘பம்பிக்குத் தீட்டி யாலே
படுத்தன்றிப் படுக்கே’ னென்னும்
வெம்பிக்கண் ணிமையா வெற்றி
வேடனீ டாகா னென்ன,
நம்பிக்கை யுடனே நாடி
நடைமுறை வகுத்தான் நன்றாய்!
வட்டின்றி யாடுஞ்- சூதில்
வரதப்பன் வாதி யாயின்,
கட்டின்றிக் கவலை யின்றிக்
கழனியில் கரும்பை நட்டு
மட்டின்றிப் பணத்தைச் சேர்க்கும்
மருதப்பன் வழக்கில் மாட்டப்
பட்டொன்ற முடிப்பான் பாங்காய்ப்
பகையெனும் பெயரில் லாதே!