53
“என்னடா சுந்தா! ஏற்ப
இருக்கின்ற தாடா! எல்லாம்
தின்னடா! உனக்கும் நல்ல
திசையடா இனிமே” லென்றே,
சின்னடா, பெரிய டாவும்
சிரிப்போடு போட்டுப் பேசி,
முன்னிடா வழக்கை யூரில்
மூட்டிட முனைந்தா னய்யன்!
“பாசன வாய்க்கால், பள்ளம்,
படுகைகள் பார்க்க நாளைத்
‘தாசில்தார்’ வரவுள் ளார்;என்
தாய்மாமா அவர்!உன் பேரில்
கோசனார் படுகை பட்டா
கொடுத்திடக் கூற, நானும்
யோசனை செய்தேன்; நீயும்
ஒப்புவா யன்றோ” என்றான்.
குப்பையில் கூடத் தெய்வம்
குடியுள்ள தாகக் கூறி,
ஒப்பவும் செய்து கோயில்
ஊரிலுண் டாக்கு மய்யன்,
அப்பம்,தேன் குழலுக் கொப்ப
ஆதார ஆசைச் சொற்கள்
செப்பிடக் கேட்ட சுந்தன்
சிந்தையில் பொங்கிற் றின்பம்!
“இனிப்பிட்ட பணியா ரம்போ
வினிக்குஞ்சொல் லிதுவென் றாலும்,
தனிப்பட்ட முறையில் பட்டா
தன்பேரில் தரவே கோரி
மனுப்போட்டுள் ளானாம், மற்றம்
மாரிமுத் தானு” மென்றான்,
கனப்பிட்டுக் குளிரைக் காயக்
கருதுவோர் நிலையில் சுந்தன்.