பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

519


துறையில் நடைபெற்ற போரில் வெற்றி கொண்டதைப் பாராட்டியுள்ளார். (அகம் : 199) செழியனின் தலையாலங்கானப் போர் வெற்றியைப் பாராட்டிய அதே பாட்டில் (அகம் : 209) தமிழகத்து வடவெல்லை ஆண்டபுல்லி, கொல்லி ஆண்டவல்வில் ஒரி, மலையமான் திருமுடிக்காரி ஆகியோரையும் பாராட்டியுள்ளார்.

பழந்தமிழ்ப் பாக்கள் உணர்த்தும், அன்றைய அரசியல் நிலைகளால் தெளிவாகும் உண்மைகள் இரண்டு: ஒன்று, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், கரிகால் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற பேரரசன் எவனாயினும், ஒரு போர்க்களத்தில், தன்னை ஒழிந்த இருவேந்தர்களையும், எண்ணிலாச் சிற்றரசர்களையும் வெற்றிகொண்டுவிட்டான் என்றால், அங்கெல்லாம், அதுவரை நடைமுறையில் இருந்து வந்த அரசுகளை, அரசியல் முறைகளை அகற்றிவிட்டு, தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டிவிட்டான் எனக் கொண்டு விடல் கூடாது ; அப்போரின் விளைவு, அப்போரில் தோல்வியுற்ற அரசர்களைக் காட்டிலும், தான் ஆற்றலால் மிக்கோன் என்பதை நிலைநாட்டியது மட்டுமே என்பதுதான்.

இதைத், திருவாளர், பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களும் உணர்ந்துள்ளார்! "பேராற்றல் வாய்ந்த பேரரசன் ஒருவன், "ஒருமொழி வைத்து உலகாள்வான்", "ஒருதனி ஆழி உருட்டுவோன்", "உலகெல்லாம் ஒரு குடைக்கீழ் வைத்து ஆள்வோன்": "உலகெலாம் ஆள்வோன்" எனக் கூறப்படும் நிலையிலும், அவன் ஆட்சிக்கீழ் அடங்கிய நாடுகளில், ஆட்சிநிர்வாக முறைகளில், அமைச்சர், புரோகிதர் உள்ளிட்ட ஐம்பெருங்குழுக்களில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை, போர்க்காலனிகள் எதுவும் ஆங்கு ஏற்படுத்தப்படுவது இல்லை. வெற்றி கொண்ட பேரரசர்களின் சிறுபடைப் பிரிவுதானும் ஆங்கு நிறுத்தப் படுவதில்லை. பெருவீரன் ஒருவன் எண்ணற்ற நாடுகளுக்குத், தன்னைத் தலைவனாகக் கூறிக்கொள்வதும், ஆண்டுதோறும்,