உலக நாடுகளில் தமிழர்
103
மெய்கண்டார் சைவ சித்தாந்தம் அவர்களுக்குத் தெரியவில்லை. நான் விளக்கிச் சொன்னேன், எல்லா இடங்களிலும், நாட்டியம் – தமிழக நடனம் – கற்றுக் கொடுக்காத தென் இந்திய வீடுகளே இல்லை. ஓய்வு நேரத்தில் நாட்டியம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எல்லாப் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றி (Transliteration) கற்றுக் கொடுக்கிறார்கள். ‘தமிழில் கற்றுக் கொடுத்தால் என்ன?’ என்று கேட்டதற்கு, தமிழில்தான் இருக்கிறது. ஆனால் அதனை மொழி மாற்றிக் கற்றுக் கொடுக்கிறோம்? என்றார்கள். இயற்றமிழ் வளராவிட்டாலும் இசையும் நடனமும் வளர்கின்றன.
பால்டிமோர் சென்றேன். அன்பர் பெரியசாமி அங்கே தமிழ் வளர்ப்பவர். அவர்களின் துணைவியார் கணவரைவிடத் தமிழ்ப் பற்று மிக்கவர். தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள், விழாக்கள், கோயில் திருவிழாக்கள், விரதங்கள் முதலியவற்றிற்கெல்லாம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு விளக்கம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள். விரும்புகிறவர்களுக்கு விளக்கம் கூறும் வாய்ப்பினைத் தமிழ்நாட்டு அரசாங்கம் தரவில்லை. அவர்தம் திங்களிதழிலே விளக்கம் எழுதும்படி கூறியுள்ளார்கள்.
பாஸ்டனில் தொழில் நுட்பக் கழகத் (M.I.T)தில் நூல் நிலையம் 24 மணி நேரமும் திறந்திருக்கிறது. மருத்துவம், பொறியியல் துறைகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் 70, 80 பேர் அங்கே இருக்கிறார்கள். எல்லா வகுப்புகளிலும் இந்திய மாணவர்கள் 500 பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்றனர். தமிழ்நாட்டில் பொறியியல் மருத்துவ விஞ்ஞான அறிவாளரைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். அரசாங்கம் சரியாகக் கவனிக்காத காரணத்தால். அங்கே அமெரிக்காவில் அவர்களைப் பயன்படுத்துகிறார்கள்.