110
தமிழர் வாழ்வு
அரசாங்கங்கள் அதிக ஆதரவு தருகின்றன என்கின்றனர். உலகில் உள்ள தமிழர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி, உலகெங்கும் தமிழ் ஓங்க வழிகாண வேண்டுவது தமிழக அரசின் தலையாய கடமையாகும். கோடிகளைக் கல்விக்கென வாரி வழங்கும் நம்மரசு ஓரிரு கோடிகள் இத்துறைக்கு உதவின் உலகம் எங்கணும் தமிழ் வாழும் என்பது உறுதி.
அத்தகைய நல்ல உணர்வு ஆளுபவர் உள்ளத்து அரும்ப வேண்டும் என்று வேண்டிக்கொள்வதன்றி நான் என் செய்யவல்லேன். ‘இறைவா! ஆளுபவர் உள்ளங்களை – தமிழ் வாழ, தமிழர் உலகெங்கணும் வாழ – இந்த வகையில் ஆற்றப்படுத்துவாய்’ என வேண்டி அமைகின்றேன். –1985
***
முன் பக்கத்தே மொரிஷியஸ் ‘தீவினைப் பற்றிக்’ குறித்துள்ளேன். அண்மையின் – 1989 இறுதியில் அங்கே நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கென. தமிழக அரசினால் மாநாட்டுக்கு அனுப்பர் பெற்றவருள் நானும் ஒருவன். அங்கேயும் அடுத்த ‘யூனியன்’ தீவிலும் பல தமிழர்கள் ஒவ்வொன்றிலும் இலட்சத்துக்கு மேலும் வாழ்கிறார்கள். பெயர்களெல்லாம் தமிழ்ப் பெயர்கள் – கல்வி அமைச்சர் தமிழர் – ஊர் தோறும் தமிழ்க் கோயில் – கோயில் தோறும் தேவாரப் பாடல்கள். எனினும் தமிழ் ‘படிக்க’ தெரியாதவர் பலர் – பள்ளிகள் இப்போது தான் வளர்ந்து வருகின்றன. அங்குள்ளோர்தம் தமிழ் உள்ளமும் தமிழ் உணர்வும் நன்கு போற்றுதற்குரியன. ஆயினும் படிக்கப் போதிய ஆரம்பத் தமிழ்ப் பாடநூல்கள் இல்லை. தமிழக அரசு நினைத்தால் இதைப் போக்கலாம். இங்குள்ள தலைவர்கள் சிலரிடம் இது பற்றிக் கூறினேன். வழி உண்டானால் அங்கே தமிழ் வளரும் – தமிழர் நலம் பெறுவர் – தமிழ் மணம் பெறும்.