168
தமிழர் வாழ்வு
லேயே வைக்க முடியாத சங்கடமான நிலை உண்டாகின்றது. மாநிலசுயாட்சி கோரும் தமிழக அரசு, முதலில் இதில் சுயாட்சி கோரி இத்துறையை முற்றும் தனதாக்கிக் கொள்ளவேண்டும்.
தமிழக அரசின்கீழ் இத்துறை வருவதற்கு அடிப்படை ஒன்று. வரலாற்று அடிப்படைக்குரிய கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோயில்களில் உள்ளன. கோயில்களோ மாநில ஆட்சியில் உள்ளன. எனவே அவற்றைப் பற்றி எழும் ஆய்வுகளும் இந்த அரசுக்கே உரிமையாக இருத்தல்தானே முறை. வேண்டுமாயின் இத்துறை வளர மத்திய அரசிடம் மானியம் பெறலாம். இத்துறைக்கெனவே. தனி அமைச்சகமும் ஆய்வகமும்கூட அமைக்கலாம். இத்துறை தமிழர் வாழ்வை உலகுக்கு உணர்த்துவது மிகமிக இன்றியமையாதது. இன்றைய தமிழக அரசாங்கமும் இந்த உண்மையை அறியாத அரசாங்கம் அன்று. அறிந்தது என்ற அடிப்படையிலேயே இந்த வேண்டுகோளை அவர்களுக்கு விடுக்கிறேன். எனவே விரைவில் இந்தத் துறையினை மாநில அரசுக்குக் கொண்டுவருவதோடு, இதன் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும் தளராது செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
எங்கோ உழன்று கிடந்த என்னை இத்துறைக்கு வலிய ஈர்த்து, இத்துறையினர் ஆற்றும் பெரும்பணியில் 'அணிலின் பணியாக' என் பணியையும் ஏற்று, எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த தொல்பொருள் ஆய்வுத் துறையினர்க்கும் — சிறப்பாக அதன் இயக்குநர் திரு. நாகசாமி அவர்கட்கும் என் நன்றியைத் தெரிவித்து அமைகின்றேன். வணக்கம்.{{Nop}}