34
தமிழர் வாழ்வு
புற நாகரிகங்கள் எத்துணைதான் நம் நாட்டுப் பெண்களை மாற்றிய போதிலும், அவர்தம் அக வாழ்வு 'பெண்மை நலம்' தோய்ந்த நிலையிலே உள்ளமையை நம்மால் உணர முடிகின்றதே. இன்றும் வெளி நாகரிகமாகிய புறநாகரிகம் முற்றும் பரவாத உள்நாட்டு ஊர்களில் மகளிர்தம் பண்பு கெடா வகையில் வாழ்கின்றனர். நகரங்களிலும்கூட எங்கோ ஒருசிலர் தவிர்த்து மற்றைய பெரும்பாலான மகளிர் 'பெண்மை நலப்' பொலிவுடன் தானே வாழக் காண்கின்றோம். மேலை நாட்டுப் படிப்பும் பட்டமும் பிற நடை உடைகளும் பெற்றும் கொண்டும் வாழ்கின்ற பெண்களிலும் பலர் 'பெண் உள்ளம்' உடையவர்களாகவே இருக்கிறனர். ஆகவே பெண்மை முற்றும் அழியவில்லை - அழியவும் அழியாது. என்பது உறுதி.
பெண், சமுதாயத்தின் மங்கலப் பொருளாக - வாழ்வுப் பொருளாக - வைப்புப் பொருளாகப் போற்றி மதிக்கப் பெறுகிறாள். மணவாழ்வு அவள் பொலிவை இன்னும் அதிகமாக்குகின்றது. நல்ல நிகழ்ச்சிகளில் மணம் புரிந்து மக்களைப் பெற்றவர்களே நல்ல வரவேற்பினையும் முதலிடத்தையும் பெறுகின்றனர். மங்கலமும் முதலிடமுமின்றி வேறு எத்துணை வளம் பெற்றிருப்பினும் வறண்ட பாலை நில வாழ்வை மேற் கொண்டோடும் மங்கையர் இரக்கத்துக்கு உரியவராகவே அமைகின்றனர். சமுதாயம் அவர்களை ஒதுக்கவே எண்ணுகிறது.
மணம் புரிந்த மகளிருள் சிலர் மகப்பேற்றினை விரும்புவதில்லை எனக் கூறுவர். இது எத்துணை உண்மையோ எனக்குத் தெரியாது. மணம் விருப்பாத மங்கையும் மகவினை விரும்பாத பெண்மையும் உலகில் வாழ முடியுமா என்பது ஐயமே. உயிர் வாழ்வே கூடி வாழத்தான் என்ற உயிர்த்தத்துவத்தை நம்முன் உள்ள ஓரறிவுடைய உயிர் தொடங்கி ஐயறிவுடைய உயிர்வரை வாழ்ந்து காட்டு-