4
அந்த நிலையில்தான் இன்று இந்த நூல் வெளிவருகின்றது. பசித்தவன் நிலையிலே பழைய காகிதக் குப்பைகளைக் கிளறினேன். எங்கெங்கோ எது எதற்கோ எழுதிய கட்டுரைகள் கிடைத்தன. சில மங்கியிருந்தன-சில கிழிந்திருந்தன-இரண்டொன்று புதியனவாக இருந்தன. என் கருத்தினுக்கு அரண் செய்யும் வகையில் என் மாணவர் சிலர் இவற்றை நூலாக்கலாமே என்றனர். எனவே உள்ளவற்றுள் சிலவற்றை எடுத்துப் பார்த்தேன். இருபத்தைந்து சிறு கட்டுரைகளை ’ஒங்குக உலகம்’ என்ற பெயரில் தொகுத்து வெளியிடமுயன்றேன். பெரிய கட்டுரைகளுள் இருபது எடுத்து ஒரு நூலாக்க நினைத்தேன். அவை அனைத்தையும் ஒருநூலாக்கினால் நானூறு பக்கங்களுக்கு மேலாகி வாங்குவோர் கையையும் பையையும் வருத்தும் என்பதால், முதல் எட்டுக் கட்டுரைகளையே இங்கு வெளியிடு கின்றேன். இருபது கட்டுரைகளையும் ’சொல்விளக்கம்' 'அரசியலும் வரலாறும்', "சமுதாயம்", ’சமயம்', 'இலக்கியம்' என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து வெளியிட நினைத்தேன். அவற்றுள் முதல் இரண்டு பகுதிகளே-ஒன்பது கட்டுரைகளே-இந்நூலில் இடம் பெறுகின்றன. இவையன்றி இன்னும் வானொலிப் பேச்சு முதலியன 200 பக்க அளவில் மற்றொரு நூலாக வரலாம்.
இக்கட்டுரைகள் அனைத்தும்-இரண்டு தலைப்புக்களிலும் தமிழர் வாழ்வு நலம் பற்றியே-அவர்தம் பழங்கால வாழ்வு - வரலாறு - வற்றாவளம் - சமயம்-இலக்கியம் பற்றியே அமைவதால் இந்நூலுக்குத் தமிழர் வாழ்வு எனப் பெயரிட்டேன். அடுத்த பன்னிரண்டு கட்டுரைகளும் ’தாய்மை' என்ற தலைப்பினை உடைய நூலாக உடன் வெளிவருகிறது.
தமிழர் வாழ்வு தொன்மையது. வரலாற்று எல்லைக்கு அப்பாற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் நின்று காணின், அத்தகைய இலக்கணம் மலர்வதற்கு எத்தனை