பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

103



மகத்துவமாப் பிரம்மாண்ட
மாகச் செய்யும்
வல்லவா நீ நினைத்த
வாறே யெல்லாம்6

என்று இரத்தினச் சுருக்கமாக விளக்குவர். நேற்றைய பொழிவிலும் இதனைச் சுட்டியுள்ளேன்.

எலக்ட்ரான்களின் அமைப்பு: ஒர் அணுவின் அமைப்பில் எலக்ட்ரான்கள் அமைந்திருக்கும் முறையைக் காண்போம். அணுவில் உட்கருவிற்கு வெளியே இருக்கும் எலக்ட்ரான்கள் பல வட்டங்களில் கோள் நிலையில் சுற்றி வருகின்றன. இவை கடுமையான வேகத்திலும் சுற்றுகின்றன. இதனைப் பாரதியார்,

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்.7

என்று நினைந்து பாடுவர். சிலவற்றின் வேகம் விநாடிக்கு அறுபதினாயிரம் மைல் வரையிலும் உள்ளது. இவை விரைவாக ஓடி வருவதனால்தான் அணுவுக்குத் திடமான உருவம் ஏற்படுகின்றது. ஒர் எடுத்துக்காட்டால் இவ்வமைப்பு தெளிவாகும். மிதி வண்டியின் சக்கர மையத்திலிருந்து அதன் பரிதிக்குப் பல கம்பிகள் செல்லுகின்றன. சக்கரம் சுற்றாமல் இருக்கும் பொழுது இரண்டு கம்பிகளிடையே நம் விரலை விடலாம். சக்கரம் விரைவாகச் சுழலும் பொழுது நாம் விரலை விடமுடியாது. இதைப் போலவே எதிர்மின்னிகள் தம் ஓட்டத்தினால் அணுவிற்குத் திண்மையையும் தருகின்றன. அதனால் அணுவின் உட்கரு நன்கு பாதுகாக்கவும் பெறுகின்றது. எனவே, அணுவின் காலியிடம் நிரம்ப இருந்த போதிலும் அதற்குள் செல்வது மிகச் சிரமம். அணுவின் அமைப்பைப் பாரதப் போரில் ஒருநாள் அமைக்கப்பெற்ற சக்கர வியூகத்துடன் ஒப்பிடலாம்.

கதிரவனைப் பல கோள்கள் பல மண்டலங்களில் சுற்றி வருவதைப் போலவே, உட்கருவினைப் பல வட்டங்களில் எலக்ட்ரான்கள் ஒருவித கணக்கில் சுழன்று கொண்டுள்ளன. ஓர் அணுவில் ஓர் எலக்ட்ரான் இருந்தால் ஒரு மின்னூட்டம்


6. தா. பா : தந்தைதாய்-6

7. பாஞ்சாலிசபதம்-902