பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழில் அறிவியல்—அன்றும் இன்றும்


நந்தட்டான் காண்கின்றான்; அஃதாவது அழகியதொரு படுக்கையில் அமர்ந்து கொண்டு சீவகன் கனகமாலையின் கரிய குழலை அணிசெய்து கொண்டு நிற்பதைக் காண்கின்றான். மதிமுகம் என்ற மந்திரத்தை ஒதியவுடன் வாசவதத்தை இருந்த இடத்திலிருந்து ஒரு பேரொளி வெள்ளம் (Flood of light) இருப்பூர்தியின் முன்னுள்ள விளக்கின் ஒளி போன்றதொன்றுவீசியிருக்க வேண்டும். அவ்வொளி சீவகன் இருப்பிடத்தையும் அவன் மேற்கொண்டிருந்த செயலையும் புலனாக்கி இருக்க வேண்டும். அஃதாவது, அவ்வொளி தொலைவிலுள்ள காட்சி யைக் காண்பதற்குத் துணை செய்திருக்க வேண்டும்’ என்று. கருதலாம்; இன்றுள்ள தொலைக்காட்சி சாதனம் போன்றதோர் அமைப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்கலாம்.

பாரதத்தில்: பாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. பாண்டவர்கட்கும். கெளரவர்கட்கும் குருட்சேத்திரம் என்ற இடத்தில் பதினெட்டு நாட்கள் நடந்த போரின் நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் சஞ்சயன் என்பர்ன் அரண்மனையிலிருந்து கொண்டே திருதராட்டிரனுக்கு அவ்வப்போது தெரிவிக்குமாறு ஒர் எற்பாடு செய்திருந்ததை நாம் அறிவோம். சஞ்சயனும் கிரிக்கெட் விமரிசனம், போல் அவ்வப்பொழுது நிகழும் நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே திருதராட்டிரனுக்கு, அறிவித்து வருவதாக வியாச பாரதத்தால் அறிகின்றோம். ஆனால் வில்லிபாரதத்தில் அவ்வாறு காணப் பெறவில்லை. எனினும் பதினெட்டாம் போர்ச் சருக்கத்தில் சஞ்சயன் நூற்றுவர் இறந்த செய்தியைத் திருதராட்டிரனுக்கும் காந்தாரிக் கும் உரைப்பதாக ஒருபாடல் காணப்படுகின்றது.

நாடியசொல் சுருதிநிகழ் நாவினான்
சஞ்சயனும் நள்ளென் கங்குல்
ஒடியொளித் திருகதிரோன் உதிர்ப்பதன்முன்
விலோசனம்நீர் உகுப்ப எய்தி
ஆடிமுகத் தரசனுக்கும் ஐயிருப
தரசரையும் அளித்து வாழ்ந்து
வாடியமெய்ச் சவுபலைக்கும் உற்றதெல்லாம்.
வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான்.52


52. வில்லிபாரதம்-18 ஆம் போர் 146: 239