பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

59



இருவகைப்படும். அவையாவன : போகம் நுகர்தலும் வீடு பெறுதலும் என. அவற்றுள் வீடு துறவறத்தில் நின்றாற்கல்லது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது'75 என்ற இளம் பூரணரின் உரைப் பகுதியால் போகம் நுகர்தலில் 'இணை விழைச்சும். ஒரு பகுதியாகும் என்பது பெறப்படுகின்றது. கரு உருவாகும் நிலையை அடைந்ததும் தானாக எழும் உணர்ச்சியாகிய காமத்தால் தூண்டப்பெற்ற ஆணும் பெண்ணும் ஒன்று கூடி இணைவிழைச்சு புரிகின்றனர். இந்தப் புணர்ச்சி உலகுயிர் தோற்றத்திற்கும் வாழ்க்கை நலத்திற்கும் இன்றியமையாக் காரணமாக இருத்தலாலும், அப்புணர்ச்சி நிகழும் அகவொழுக்கம் இன்றியமையாப் பொருள்களில் ஒன்றாக இருத்தலானும் அதனைப் பண்டைப் பெரியோர் அகப்பொருள் எனச் சிறப்பித்து அதனைப் பலவாறு விரித்தும், இலக்கண வரையறை செய்தும், இலக்கியத்தில் பொதிந்தும் பொன்னேபோற் போற்றினர்.76 இந்த அகப் பொருளின் அருமை பெருமையை இன்றைய மணமக்கள் நன்குணர்ந்து, அதன் தகுதியறிந்து, நுகர்ந்து, இன்புற்று இனிது வாழ்தல் வேண்டும். இது கருதியே அறிவியல் அடிப்படையில் இணைவிழைச்சினை எங்ஙணம் மணமக்கள் வரையறை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பண்டையோர் குறிப்பிட்டுள்ளனர்.

இளந்தம்பதிகள் உடற்கூற்றையும் உடல் நல விதிகளையும் கவனியாது-பெரும்பாலும் அறிவின்மையினால்-விருப்பப்படி விளையாடுகின்றனர். சிலர் மிருக உணர்ச்சி மீதுளர்ந்து மாதவிடாய் பொழுதும், கருப்ப காலத்திலும் உடல் உறவு கொள்ளுகின்றனர். சிலர் சூதக ஒய்வின் பொழுதும் கொள்ளுகின்றனர். இவற்றையெல்லாம் நன்குணர்ந்த நம்முன்னோர் சில


74. தொல்-பொருள் - களவியல் -1 (இளம்)

75. தொல்-பொருள்-இளம்பூரணர் உரை

76. இந்த ஆசிரியரின் "அகத்திணைக் கொள்கைகள்”

(பாரி நிலையம், 184, பிரகரீசம் சாலை, சென்னை -
600 108) என்ற நூலைப் படித்துத் தெளிக.