பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

91



முன்னர் அணுவினைப் பற்றி அறிவியலறிஞர்கள் கண்டறிந்த செய்திகளை எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இன்றைய மக்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதற்கு இஃது ஒரளவு துணை செய்யும்.

அணுவின் நுட்பம்: அணுவின் அமைப்பை விளக்குவதற்கு முன்னர் அதன் நுட்பத்தை அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. அணு மிக மிக நுண்ணிய துகள். பேராற்றல் வாய்ந்த நுண்ணனுப் பெருக்கியால் காணமுயன்றாலும் அது நம் ஊனக் கண்ணுக்குப் புலனாகாது. அரைக்கோடி அணுக்களை அணிவகுத்து நிறுத்தினால் அவை எழுதும்போது வைக்கும் ஒரு முற்றுப் புள்ளியினுள் அடங்கிவிடும். ஆயினும் அறிவியலறிஞர்கள் இவ்வளவு நுட்பமான பொருளின் எடை, அகலம், நீளம், கனம், அதன் அமைப்பு, இனம், முறை ஒட்டிப் பெருகும் சட்டம், மாறும் விதிகள், ஆக்கப்பாடு, அழிவாற்றல் முதலிய இவ்வளவையும் கண்டறிந்துள்ளனர். ஒரு தாய்க்குக்கூட தான் ஈன்ற பிள்ளையைப் பற்றி இவ்வளவு அறிந்திருக்க முடியாது. இதுதான் இன்றைய விந்தை! இவற்றையெல்லாம் ஆய்வுக் கூடங்களில் ஆய்ந்து கண்டுள்ளனர் அறிவியலறிஞர்கள்.

அணுவின் நுட்பத்தை சில எடுத்துக் காட்டுகளால் மேலும் தெளிவாக்குவேன். ஓர் அங்குலத்தினை இருபத்தைந்து கோடியாகப் பங்கிட்டால் கிடைக்கும் அளவே அணுவின் குறுக்களவாகும் என்று கணக்கிட்டுள்ளனர். பெரிய அணுவின் குறுக்களவு இதனைவிட இரண்டரை மடங்கு பெரியது; அஃதாவது ஒர் அங்குலத்தினைப் பத்துக் கோடியாகப் பங்கிட்டதில் ஒரு பங்காகும். இதனை ஒர் எடுத்துக் காட்டினால் விளக்கினால் நல்ல தெளிவு பிறக்கும். ஒரு திராட்சைப் பழத்திலுள்ள ஒவ்வொரு அணுவும் ஒர் அங்குலவிட்டமுள்ள பந்துபோல பெருக்கமடைவதாகக் கற்பனை செய்து கொண்டால், அந்த திராட்சைப்பழம் நம் பூமியளவு உப்பிப் பெருக்கமடைந்துவிடும். இத்துணைச் சிறிதளவுள்ள பொருளை மனத்தால் எண்ணிப் பார்க்கவும் சிரமமாக உள்ளது. நமக்கு மட்டுமல்ல; அறிவியலை முற்றும் கற்றுத் துறைபோய் வித்தகர்கள் உட்பட அனைவருமே அணுக்களை அதிசயப் பொருள்களாகவே-அற்புதப் பொருள்களாகவே-கருதுகின்றனர். ஒரு சிறு துகளைப் பார்க்கவும். பெருக்காடி தேடும் நமக்கு அணு எப்படிப் புலனாகும்?