பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

135


ஆனாலும் அவருடைய தாக்கம் வைகைக் குழுவினரை இயக்குவித்திருக்கிறது. இதை அதன் இதழ்கள் நிரூபிக்கின்றன.

முதல் இரண்டு இதழ்களில் வைகை கவிதைகள் பிரசுரித்தது. பின்னர், 'கதைகள், கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா' என்று அறிவித்து வந்தது. சிந்தனைக் கட்டுரைகள், முக்கியமாகப் புத்தக விமர்சனங்கள் வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எதிர்பார்த்த தரத்துக்குக் கட்டுரைகள் வரவில்லை. ஆகவே, இதழ்கள் காலதாமதத்துடனேயே பிரசுரமாயின.

'வைகையின் தாமதத்திற்குக் கட்டுரைகள் வராததும் ஒரு காரணம். போதுமான விஷயங்கள் கிடைத்தால் இந்தத் தாமதம் தவிர்க்கப்படும்' என்றும் ஒரு இதழில் அது அறிவிப்புச் செய்தது.

'வைகை' ந. முத்துசாமியின் நீண்ட கட்டுரைகளை அதிகம் வெளியிட்டுள்ளது. தெருக்கூத்து பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார். தெருக்கூத்துக்கு உதவி தேவை. நடேசத் தம்பிரானின் தெருக்கூத்து, கொண்டையார் தண்டலம் வரதப்ப வாத்தியாரின் தெருக்கூத்து, பொம்மலாட்டங்களும் தெருக்கூத்தும், பத்மா சுப்ரமண்யத்தின் மீனாட்சி கல்யாணம், மீனாட்சி கல்லூரியில் நாடகங்கள்-இப்படிப் பல கட்டுரைகள். எல்லாம் நீளம் நீளமானவைதான். சில 16 அல்லது 7 பக்கங்கள்கூட வந்துள்ளன. அனைத்தும் ந. முத்துசாமியின் தெருக்கூத்து பற்றிய அக்கறையையும் ஆர்வத்தையும் ஆராய்ச்சியையும் ஈடுபாட்டையும் காட்டுகின்றன.

முத்துசாமி வேறு சில கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஒரு சினிமா பற்றி, சுந்தர ராமசாமி எழுதிய 'குரங்குகள்' என்ற சிறுகதை பற்றி எட்டுப் பக்க விரிவுரை. இப்படிச் சில.

சுந்தர ராமசாமியின் கருத்துக்களுக்கு வைகை முக்கியத்துவம் அளித்து வந்தது. வெ. சாமிநாதனின் 'ஓர் எதிர்ப்புக் குரல்' என்ற கட்டுரைத் தொகுப்புக்கு க. ரா. எழுதிய முன்னுரையை வைகை 8 வது இதழில் மறு பிரசுரம் செய்தது, 'வெங்கட்சாமிநாதனின் கருத்துலகம்' என்ற தலைப்பில் வண்ணதாசனின் 'தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்' என்ற கதைத் தொகுதிக்கு சு. ரா. எழுதிய முன்னுரையை 'வண்ணதாசன் கதைகள்' என்ற தலைப்புடன் பிரசுரித்தது. நாஞ்சில் நாடன் நாவல் 'தலைகீழ் விகிதங்கள்', காஸ்யபனின் 'அசடு' ஆகியவற்றுக்கு க. ரா. விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.