பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

வல்லிக்கண்ணன்


இப்படியொரு யோசனை. நண்பர்களின் உதவியால் ஆரம்பித்தேன். இதழ் இலவசம்தான்.

எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல. சும்மா நடக்கவே.’

முதல் ஸ்வரம் (இன்லண்ட்) தாளில் மாலன், ப்ரியதர்ஷன், ஆர். பி. எஸ். சுப்ரபாரதி மணியன், ’அஞ்சிதநுட்பன்’ ஆகியோரின் கவிதைகள் அச்சாகியிருந்தன.

இரண்டாவது இதழ் நீளமான வெள்ளைத்தாளில் ( ஃபுல்ஸ் கேப் பேப்பரில்) அச்சாகி வந்தது, இளம் கவிஞர்களின் கவிதைகளோடு. இளைஞர்களின் உற்சாகம் ஊற்றுப் பெருக்காய் அதில் சிதறித் தெளித்துக் கொண்டிருந்தது.

‘என்னவென்று இப்போது சொல்ல ? ஏகமாய் அடுக்கி, ததும்பும் எண்ணங்களை வரிசைப்படுத்த ஆசை இருந்தாலும் கொஞ்சமாய் மட்டும் இங்கே ஸ்வரத்தை இப்படி வித்யாசமாய் இசைத்திருக்கிறோம். மனசிற்குள் திருப்திப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. சந்தோஷம் சிறு ஊற்றாய் ஊறிக் கொண்டிருக்கிறது. இன்னும் செய்ய வேண்டிய கனவுகள் நிறைய. பார்ப்போம். 13 இளம் மனசுகளின் பாதிப்புகள் விளைவித்த 13 கவிதைகள் இந்த ஸ்வரத்தில். இவைகள் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டால் மிக மகிழ்வோம்.’

நந்தலாலா மற்றும் நண்பர்களின் உற்சாகமும் ஆர்வமும் மாதத்துக்கு மாதம் அளவில் பெருகி மலர்ந்தன. 4 -ம் இதழ் ஒடுக்கமான நீள வடிவில் அச்சுப் புத்தகமாக உருவெடுத்தது.

‘எப்படியோ கவிதை, வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகப் போய்விட்டது. இனிப் பேசிப் பயனில்லை. பின்னுக்குத் திரும்பிவிட வழியில்லை. கவிதை ஒரு அசட்டுத்தனம் என்று சொன்னால் என்ன ? பைத்தியக்காரத்தனம் என்று சொன்னால்தான் என்ன ? கவிதையை நெஞ்சிலிருந்து துடைத்தெறிந்து விடமுடியாது. அது ரத்த ஒட்டத்தையே கடற்பஞ்சு கொண்டு ஒத்தி உறிஞ்சி துடைத்தெடுத்து விடுகிற மாதிரி. ஒன்றும் பயனில்லை. விடுங்கள். புதைகுழி வரைக்கும் தொடர்ந்து வருகிற நோய் அல்லது பேய் இது. எப்படி வைத்துக் கொண்டாலும் சரி. இது ஒன்றும் புதிதில்லை. இந்த மாதிரி கிறுக்கர்கள் காலங் காலமாக இருந்தே வந்திருக்கிறார்கள். அவர்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியவில்லை.’