பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

265


வில்லியம் ஃபாக்னர் பேட்டி, ஜோசப் ப்ராட்ஸ்கி மீதான விசாரனை (லெனின்கிராட் நகரில் நடைபெற்றது), சர்ரியலிசத்தின் கவிதைக் கோட்பாடுகள்-இத்தகைய விஷயங்களையும் மீட்சி பிரசுரித்திருக்கிறது.

சுய படைப்பான சிறுகதைகளும் கணிசமான அளவில் மீட்சியில் வெளிவந்துள்ளன. கோணங்கி, வண்ணதாசன், விமலாதித்த மாமல்லன், சுகுமாரன் கதைகள் வித்தியாசமானவை; அவரவர் படைப்பாற்றலை வெளிப்படுத்துபவை. நல்ல கவிதைகளையும் மீட்சி பிரசுரித்துள்ளது.

கம்யூனிஸ்டுகளும் கலையும் என்ற தலைப்பில் ஞானி சிந்தனையைத் தூண்டும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். திரைப்படம் பற்றிய கட்டுரைகளும், வண்ணதாசன் சிறுகதைகள்—சா. கந்தசாமி நாவல்களுக்கான விமர்சனக் கட்டுரைகளும் மற்றும் பல நூல்கள் பற்றிய விமர்சனங்களும் வந்திருக்கின்றன.

மீட்சியின் 10-ம் இதழ், கர்நாடக இசை— விவாதத்திற்கான சில குறிப்புகள் என்ற விசேஷக் கட்டுரையைக் கொண்டுள்ளது. இந்த இதழை இசைச் சிறப்பிதழ் என்று கூறலாம். ’இசை— சில அடிப்படை அணுகல்கள்’ குறித்து பிரம்மராஜன்—சுகுமாரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். செய்தி என்ற தி. ஜானகிராமனின் இசை சம்பந்தமான ஒரு கதையும், அவருடைய நெகிழ்ச்சி எனும் கட்டுரையும் பிரசுரம் பெற்றுள்ளன.

11-ம் இதழ் ஆத்மாநாம் நினைவு இதழாக அமைந்திருக்கிறது. 12-ம் இதழ் (1984 அக்டோபர்—நவம்பர் ) ஓராண்டு நிறைவுச் சிறப்பிதழ் ஆகும். சுந்தர ராமசாமி, வண்ணதாசன், கோணங்கி கதைகள் இதில் உள்ளன. மற்றும் கவிதைகளும் கட்டுரைகளும்.

மீட்சியும் நவீன ஓவியங்களை அட்டைப் படமாக வெளியிட்டு வருகிறது.

மையம் (காலாண்டு இதழ் )

சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து வெளிவரும் மையம்’

1983 அக்டோபர்—டிசம்பர் இதழாகத் தனது முதல் இதழைக் கொண்டு வந்தது. ஆசிரியர் : ஜெயதேவன்.