பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. கலா மோகினி


ஆழ்ந்த, கனமான விஷயங்களை உணர்ச்சிச் செறிவுடனும் நடை நயத்தோடும், சிந்தனைக்கு வேலை வைக்கும் விதத்திலும், புதிய ரீதிகளிலும் எழுதுகிற போக்கு மறுமலர்ச்சி இலக்கியப் போக்கு என்ற பெயரைப் பெற்றிருந்தது.

இத் தன்மையில் எழுதுவதில் ஆர்வம் காட்டிய எழுத்தாளர்கள், தமிழ் மறுமலர்ச்சிக்கு பொன் ஏர் பூட்டிய முதல்வன் ஆகவும், தங்களுக்கு முன்னோடியாகவும் மகாகவி சுப்பிரமணிய பாரதியை ஏற்றுக் கொண்டார்கள். பாரதி பாதையில் முன் சென்று மேலும் வளமான புதிய சோதனைகளைத் தமிழில் சேர்ப்பதே இவர்களது லட்சியம்.

இத் துடிப்புடன் செயலாற்றத் துடித்த படைப்பாளிகளுக்கு 'மணிக்கொடி' இலக்கியப் பத்திரிகை நின்றுவிட்டது பெரிய இழப்புதான். அதைத் தொடர்ந்து தோன்றிய 'சூறாவளி' வாரப் பத்திரிகை எழுந்த வேகத்திலேயே ஓய்ந்துவிட்டதும் மறுமலர்ச்சி இலக்கியவாதிகளுக்கு ஒரு நஷ்டமாகவே அமைந்திருந்தது.

ஜனரஞ்சகமான விஷயங்களை வாசகர்களை வசீகரிக்கும் விதத்தில் கொடுப்பதோடு, பத்திரிகையை வர்த்தக நோக்குடன் நடத்தி வெற்றியும் கண்ட 'ஆனந்த விகடன்' வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தது. 1933 முதல் 'விகடன்' தீபாவளி மலர் என்ற பெயரில் விசேஷத் தயாரிப்பு ஒன்றையும் வெளியிடலாயிற்று.

இந்தச் சிறப்பு மலர்களும் இலக்கியவாதிகளுக்கு திருப்தி அளித்ததில்லை. எனவே, மறுமலர்ச்சி இலக்கிய மலர்களை உருவாக்க வேண்டும் என்ற துடிப்பு அந்தக் காலத்துப் படைப்பாளிகளுக்கு உண்டாயிற்று. -

‘தினமணி' அவர்களுக்கு உதவியது. இரண்டு வருடங்கள் ‘தினமணி பாரதி மலர்’ என்ற பெயரில் சிறப்பு வெளியீடு பிரசுரமாயிற்று. 1934, 1935-ம் வருடங்களில் தோன்றிய இம்மலர்கள் கையில் பிடித்துப் படிப்பதற்கு வசதி இல்லாத வடிவத்தில்-தினமணி நாளிதழின் ஞாயிறு அனுபந்தமான ‘தினமணிச் சுடர்' அளவில் இருந்தன. மிக அதிகமான பக்கங்களுடன் ( குறைந்த விலையில்) வெளிவந்த இம் மலர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் தரமான படைப்புகளைக் கொண்டிருந்தன.