பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

வல்லிக்கண்ணன்


சிறந்த 'ஆண்டு மலர்' களைத் தயாரித்து இலக்கியப் பணி புரிந்துள்ளது.

'புத்தக மதிப்புரை' ப் பகுதி மூலம் ரசிகர்களுக்கு பலப்பல புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.

‘சரஸ்வதி' அதன் காலத்தில், பல நல்ல எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது. புதிய எழுத்தாளர்கள் ஏற்றம் பெற இடம் தந்தது. புதிய முயற்சிகளுக்கும் சோதனைகளுக்கும் ஊக்கம் அளித்தது. ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழ் நாட்டு வாசகர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தியது. தத்துவ ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் பிறமொழி இலக்கியங்களையும் நமது இலக்கியங்களையும் விமர்சனம் செய்தது. பல்வேறு எழுத்தாளர்களின் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. சிறுகதை வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியுள்ளது.

ஆகவே, புதுமை இலக்கிய யுகத்தில் 'சரஸ்வதி' ஒரு சகாப்தத்தைத் தோற்றுவித்து விட்டது.

ஆனாலும், பொருளாதார ரீதியில் தோல்வி மேல் தோல்வியே கண்டது. மூன்றாவது ஆண்டு முதல், இத்துறை வெற்றிக்காக விஜய பாஸ்கரன் ஏதேதோ திட்டங்கள் வகுத்தும் அறிவிப்புகள் விடுத்தும் பயனில்லை. நஷ்டம் வளர்ந்து கொண்டே போயிற்று. தாங்கமுடியாத அளவு நஷ்டம் பெருகியது. அவர் 'சரஸ்வதி' யை நிறுத்திவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1962-ம் வருஷம் நான்காவது இதழுடன் (ஜூன் மாதம்) சரஸ்வதி நின்று விட்டது.

'சரஸ்வதி' யின் விரிவான வரலாற்றை வல்லிக்கண்ணன் எழுதிய சரஸ்வதி காலம் என்ற நூல் விவரிக்கிறது.