பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

134



கொத்துமல்லிக்கு ‘உருள் அரிசி’ என்று ஒரு பெயராம். கடுகுக்குக் ‘கடிப்பகை’ என்று ஒரு பெயராம்.

“உருளரிசி கொத்துமலி யென உரைப்பர்.”

“கடிப்பகை, ஐயவி, கடுகின் பெயரே.”

கடிப்பகை என்றால் பேய்க்குப் பகை என்பது பொருள் (கடி = பேய்). வெண்சிறு கடுகை அரைத்துச் சாந்து பண்ணிக் குழந்தையின் உடலில் பூசி வைத்தால் பேய் பிசாசுகள் அண்டமாட்டா என்பது அக்காலத்தவர் நம்பிக்கை. இதற்குக் கடிப்பகை என்னும் பெயர் சான்று. இவ்வாறு சுவையான பல பெயர்கள் இத்தொகுதியில் கூறப்பட்டுள்ளன. இன்னும் ஒன்றே ஒன்று காண்பாம்:

உள்ளே அழுத்தமுடைய—அதாவது உள்வைரம் உடைய கருங்காலி முதலிய மரங்கள் ‘ஆண்மரம்’ எனப்படும். ஆண் மரத்திற்கு அகக்காழ், வன்மரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு. உள்ளே மெல்லிய சோற்றுத் தன்மை உடையனவாய், வெளியில் மட்டும் ஓரளவு அழுத்தமுடைய பனை, பாக்கு, தென்னை, மூங்கில் முதலிய மரங்கள் ‘பெண் மரம்’ எனப்படும். பெண்மரத்திற்குப் புறக்காழ், வன்புல் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இந்த இரண்டுங்கெட்ட முருக்க மரம், நார் மரம், பால் மரம் முதலிய மரங்களுக்கு ‘அலிமரம்’ என்று பெயராம். இந்த ஆண்—பெண் பிரிவினை, திறவுகோல்களுக்குள் ஆண் சாவி—பெண் சாவி என்று சொல்லுவதுபோல் இருக்கின்றதல்லவா? இனிப் பாடல்கள் வருமாறு:—