பீடு மிக்க மாட மதுரையின் கோட்டைச் சுவர்மீது வைக்கப்பட்டிருந்த போர்க் கருவிகளின் பெயர்கள் சிலப் பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்நாட்டிலிருந்து அயல் நாட்டிற்கு ஏற்றுமதியான பொருள்களும் இறக்கு மதியான பொருள்களும் மதுரைக்காஞ்சி முதலிய பாக்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி முதலிய ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்த மக்களின் உணவுப் பொருள்கள் இன்னவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை போன்ற பெரு நகரங்களில் இருந்த கடைகளில் விற்பனையான விளைபொருள்களும் செய்பொருள்களும் இன்னவை என்பது சிலப்பதிகாரம் முதலிய நூல்களால் தெளிவாகின்றன. இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது, தமிழ்நாட்டு இயற்கை வளத்தையும் செயற்கை வளத்தையும் மக்கள் நன்கு அறிந்து மகிழ இடமுண்டாகிறது.
இக்காலத்தில் ஆங்கில ஆட்சியால் நமது நாடு விஞ்ஞான வசதிகளைப் பெற்றுள்ளது ; உலக அறிவைப் பெற்றுள்ளது. இக்காலத்தில் தமிழ்நாட்டு மலைகள் மக்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றன, ஆறுகள் எவ்வாறு உதவுகின்றன, நாட்டின் விளைபொருள்கள் யாவை, செய் பொருள்கள் யாவை, இன்னும் எவ்வெத் துறைகளில் முயன்று நாட்டை வளப்படுத்தலாம், பாலைவனப் பகுதிகளை எவ்வாறு சோலைப்பகுதிகளாக மாற்றலாம் என்பன போன்ற விவரங்களை மக்கள் அறியத்தகும் முறையில் நூல்கள் வெளிவருதல் வேண்டும்.
கோடைக்கானல்
கோடைக்கானல் மலைத்தொடரில் வாழைத்தோட்டங்கள் வளமாகப் பயிராகின்றன ; திராட்சை பயிராகின்றது. சில கிழங்கு வகைகள் பயிராகின்றன ; தைல மரங்கள் பயிராகின்றன ; தேக்கு கருங்காலி முதலிய உயர்ந்த மர