பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்”

இவ்வரிகள் இவர் ஒரு காந்தியக் கவிஞர் என்பதைப் பறைசாற்றும். பாரதியைப்போல இவர் பாடல்கள் சுதந்திர இயக்கத்திற்கும் பயன்பட்டன. இவரை அராவைக் கவிஞராக உயர்த்திப் பாராட்டினர்.


இசைத்தமிழ்

முத்தமிழுள் நடுநாயகமாக விளங்குவது இசைத்தமிழ்: அது சங்க காலத்தில் சிறந்து விளங்கிற்று; பண்ணொடு கலந்து மண்ணோடியைந்து இயங்கிற்று; நிலத்துக்கேற்ற பண்ணும், பறையும் அமைந்தன. இயம், கிணை, குளிர் தடாரி, தண்ணுமை, துடி, முழவு, ஆகுளி, முரசு முதலியன பல வகைகளாகும் குழல், வயிர், நெடுவங்கியம் முதலியன ஊதுகருவிகளாகும். இளி, கொளை, பாலை, விளரி முதலியன இசை வகைகளாகும். இறையனார் களவியல் உரை கடல்கோளுக் கிரையாகிய இசைநூல்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் பெருநாரை, பெருங்குருகு, பாரதீயம், பஞ்சமரபு, தாள சமுத்திரம், இந்திர காளியம், இசை நுணுக்கம், இசைத் தமிழ், தாளவகையோத்து முதலியன குறிப்பிடத்தக்கன.

சிலப்பதிகார அரங்கேற்று காதையும், வேனிற் காதையும் பண்களின் திறத்தைப் பாகுபடுத்திக் காட்டுகின்றன. ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவ வரியும் அவ்வந் நிலத்து மாந்தரின் இசைப்பாடல்களைக் குறிப்பிடுகின்றன. கானல் வரிப் பாடல் கற்பார் உள்ளத்தைக் கவர வல்லது.

சிந்தாமணியில் காந்தருவதத்தையின் கடிமணமே இசைப் போட்டியின் வாயிலாகத் திகழ்கிறது. பெருங்கதை மதங் கொண்ட யானையை யாழிசையால் மயக்கி அடக்கி உதயணன் வாசவத்தையை மணந்த வரலாற்றைக் கூறுகிறது.