பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்


வடமொழி இலக்கணத்தோடு தமிழிலக்கணத்தைச் சீர் தூக்கி யாராய் வான் புகுந்த ‘பிரயோக விவேக’ நூலுடையார் அந்நூலினிறுதியிற்,

“சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்குந் தமிழ்மொழிக்கும்
வேற்றுமை கூறிற் றிணைபா லுணர்த்தும் வினைவிகுதி
மாற்றருந் தெய்வ மொழிக்கில்லை பேர்க்கெழு வாயருபுந்
தேற்றிய லிங்க மொருமூன்று மில்லை செழுந்தமிழ்க்கே.”

என்ற காரிகையில் இரு மொழிக்கும் வேறுபாடு கூறினார். ஆயினும் தமிழ்க்கும் வடமொழிக்கும் வேறுபாடு இவ்வளவுதான், இதற்குமேலில்லை யென்பது அவர் கருத்தன்று; “இது வடமொழிக்குந் தமிழ்மொழிக்கும் பேதம் கோடி கூறிட்டு ஒரு கூறுண்டோ இன்றோவென்பது கூறுகின்றது” என்று அவர் தாமே அக்காரிகை யுரைமுகத்து உரைத்தலா னென்க.

இதுகாறும் தமிழ்மொழியின் கண்ணே வடமொழிக் கலப்பைப்பற்றி ஓராற்றான் விரித்துரைத்தோம். இனித் தமிழ்மொழியின், மூவகைப் பாகு பாட்டினைப்பற்றி யெடுத்துரைப்பாம்.

வடமொழிக் கலப்பு முற்றிற்று.
 

 
111. மூவகைப் பாகுபாடு.
 

 

தொன்று தொட்டுத், தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளுடையதென்று பலரும் கூறுகின்றனர். அம்மூவகைப் பாகு பாடுகளின் இயல்புகளைக் குறித்துச் சிறிது ஆராய்வாம்.

இயற்றமிழென்பது தமிழர் யாவர்மாட்டும் பொதுமையின் இருவகை வழக்கினும் இயங்குகின்ற வசனமுஞ் செய்யுளுமாகும் நூல்களின் தொகுதியாம். இதன்கண் இலக்கியங்களும் இலக்கணங்களுமாகிய யாவுமடங்கு மென்க. எனவே இயற்றமிழ் ‘செந்தமிழ் கொடுந்தமிழ்’ என்ற வகையிலும் படுதலுமொக்கும். ஒப்பவே, “செந்தமிழ் வசனநூல்களும் செந்தமிழ்ச் செய்யு ணூல்களும், கொடுந்தமிழ் வசன நூல்களும் கொடுந்தமிழ்ச் செய்யுணூல்களும் இவ்வியற்றமிழின்கண் அடங்குமென்பது தானே விளங்கும். தமிழிற் புலவரும், அல்லாரும் ஒத்தியங்காமையான், இப்பிரிவிற்கு இடமுண்டாயிற்று. தமிழ் வழங்கும் நாட்டிற்குள்ளும் இப்பிரிவு ஏற்படுவதாயிற்று.

“செந்தமிழ் நாடே,
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுஞ்
செளந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்.
மங்கலப் பாண்டி வளநா டென்ப”