பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வல்லிக்கண்ணன்

இனி எமக்குரிய பிள்ளை. அப்பிள்ளையை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்று குருமூர்த்தி ஏற்கனவே அண்ணாமலை அய்யருக்குக் கட்டளையிட்டிருந்தார்.

குருவாக்கை வேதவாக்காகக் கொண்டு, மிகத் தீவிரமாகப் பின்பற்றி மகிழும் வீரசைவர் குலத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் செல்வக் குழந்தையை ஆறாம் மாதமே குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டார்கள். அன்று முதல் திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தையே தமது இருப்பிடமாகவும், குருநாதரையே தாயும், தந்தையும், குருவும், தெய்வமுமாகவும் கொண்டு வளர்ந்து வந்தார்கள் ஞானியாரடிகள். குருநாதர் ஆணைப்படி பெற்றோர் சிலகாலம் மடாலயத்தில் தங்கியிருந்தனர்.

மடாலயத்தின் நான்காம் குருநாதர், பழநியாண்டியை சின்னஞ்சிறு பருவம் முதலே பல நல்ல பழக்கங்களில் ஈடுபடுத்தினார். எழுத்தறியும் காலம் வந்ததும், சென்னகேசவலு நாயுடு என்பாரை மடத்துக்கு வரவழைத்து, பையனுக்கு தெலுங்கு மொழியைக் கற்பிக்கச் செய்தார். அப்படி நான்கு ஆண்டுகள் பழநியாண்டி தெலுங்கு கற்றார்.

பின்னர், தாய்மொழி தமிழும், ஆங்கிலமும் பயிற்றப் பெற்ற பள்ளியில் சேர்ந்து பழநியாண்டி கல்வி பயின்றார். பள்ளி நாட்களிலும், குருநாதர் பூசை செய்வதற்காக பூக்கொய்தல், நீராடுவதற்காகப் போதிய நீர் முகந்து, வடித்தெடுத்து, தூய்மையுடன் வைத்தல், சந்தனம் அறைத்தல், தீபமிடல் போன்ற பல தொண்டுகளையும் அவர் சிறப்புறச் செய்து வந்தார். அடுத்து தனது ஆன்மார்த்த பூசையை முடித்துக் கொண்டு காலம் தவறாது பள்ளி சென்று வருவார்.

அவர் சிறுபருவத்திலேயே, வீரசைவ சமய தீட்சை பெற்று, தமக்கு இடப்பெற்ற கடமைகளை நன்கு செய்து முடித்தார். அத்துடன்,குருநாதரோ, மடாலயத்தின் தொடர்பு கொள்ளும் பிறரோ, வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து காலம் கடவாமல் செய்து முடிப்பதிலும் கருத்தாகயிருந்தார்.

நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கே விழித்தெழுந்து, தம் பாடங்களைப் படித்து எழுத்து வேலைகளை முடித்து விடுவார் அவர். இறைவன் மீது பாக்கள் ஓதுவதையும் அவர் நியமமாகச் செய்து வந்தார். வெளிச்சம் வரும்வரை இவ் அலுவல்களை செய்துவிட்டு, ஒளிபரவத் தொடங்கியதும் நித்திய கருமங்களை