பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வல்லிக்கண்ணன்

இளைஞன் அவரை அணுகி, நான் ஞானியார் அடிகளாரைக் காணவேண்டும் என்றான்.

எதற்கு என்று அந்தச் சாமியார் கேட்டார். அவன் வந்த காரணத்தைத் தெரிவித்தான். உடனே அந்தச் சாமியார் “நான் சொல்லித் தருகிறேன்" என்று கூறி, அவனது பாட நூலிலுள்ள சில பாடல்களை விளக்கிக் கற்பித்துவிட்டு நாளைக்கு இதே நேரத்தில் வா என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

இளைஞனுக்கு மனநிறைவு ஏற்படவில்லை. ஞானியார் சுவாமிகளிடம் பாடம் கேட்கலாம் என்று வந்தோமே இவர் யாரோ ஒரு சாதாரண சாமியார் நம்மை மடக்கி அனுப்பிவிட்டாரே என்று ஏமாற்றத்துடன் சென்று, திருஞானசம்பந்தம் பிள்ளையிடம் நடந்ததைத் தெரிவித்தான். அவர், சாமியாரின் உருவத் தோற்றத்தைப் பற்றி அவனிடம் விசாரித்துக் கொண்டு, அவர்தான் ஞானியார் சுவாமிகள்- நீ நாளைக்கும் செல்வாயாக என்று கூறி அனுப்பினார்.

இளைஞர் மறுநாள் குறித்த நோத்தில் ஞானியாரின் அருளகத்தை அடைந்தார். அடிகளாரைக் கண்டதும், உங்களை இன்னார் என்று யான் நேற்று அறியவில்லை. மடாதிபதிகள் என்றால் ஆடம்பரத் தோற்றத்துடன் இருப்பார்கள். அவர்களை எளிதில் பார்க்க முடியாது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் எளிமை என்னைக் கவர்ந்துவிட்டது என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதான். அடிகளார் அவனுக்கு ஆறுதல் கூறிப் பாடம் கற்பித்தார்.

திருஞான சம்பந்தர்க்கு உமாதேவியார் ஞானப்பால் ஊட்டியது போல, திருஞான சம்பந்தம் (பிள்ளை) அனுப்பிய முஸ்லிம் இளைஞனுக்கு அடிகளார் தமிழ்ப்பால் ஊட்டினார். ஞானப்பால் உண்டதும் ஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்’ எனப் பாடல் பாடியது போல, அடிகளாரின் தமிழ்ப்பால் அருந்தியதால் இளைஞன் அடுத்த தேர்வில் வெற்றி பெற்றான்”

என்று தமது ஞானாசிரியர் அடிகளாரைப் பற்றி எழுதியிருக்கிறார் சுந்தர சண்முகனார்.

இப்படி மடத்தில் தங்கியிருக்கும்போது மட்டும்தான் பாடம் சொல்லித் தருவார் இலவசமாக என்பதல்ல; சென்ற ஊர்களில் எல்லாம் பொருள் பெறாமல், தம்மை நாடி வருவோர் யாவருக்கும் அன்புடன் இலவசமாக பாடம் கற்பிப்பார் அவர்

மடத்தோடு - சைவப்பணியும் - தமிழ்ப்பணியும் முடிந்துவிட்டது என்று திருப்தியடைந்துவிடவில்லை அவர். கார்