$0. தமிழ் விருந்து செய்யத் தகாதது இது என்று பகுத்தறியும் திறமையை இழந்துவிட்டால் மாலுமியில்லாத மரக்கலம் போல நமது வாழ்க்கை நெறி கெட்டொழியும்.இதனாலேயே, "மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் தல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறம் செய்வோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்" என்று சாதுவன் எடுத்துரைத்தான். உயிர்க்குறுதி பயக்கும் உண்மைகளைச் சாதுவன் வாயிலாகக் கேட்ட நாகர் தலைவன் அவனடிகளில் வீழ்ந்து வணங்கினான்; அதுவரை, கடலிற் கவிழ்ந்த மரக்கலங்களிலிருந்து கைப்பற்றிய அரும்பெரும் பொருள்களை அவனுக்குக் கையுறையாகக் கொடுத்தான். வங்க நாட்டினின்றும் அங்கு வந்தடைந்த வாணிகக் கப்பலில் அவனை ஏற்றி அனுப்பினான். ஆகவே, மதுவிலக்குப் பிரசாரம் தமிழ்நாட்டில் புதிதாகத் தோன்றியதொன் றன்று என்பது இக்கதையால் விளங்கும். செல்லுமிடந்தோறும் தமிழ் மக்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்யும் கடமையை மேற்கொண்டிருந்தார்கள், நாட்டில் இருந்தாலும் நடுக்கடலிற் போந்தாலும் அப் பணியை ஒல்லும் வகையால் செல்லும் வாயெல்லாம் செய்து வந்தார்கள். நரமாமிசம் புசிக்கும் நாகர் நாட்டிலே ஒதுக்கப்பட்ட ஒரு தமிழ் வணிகன், அறவுரையால் அந் நாட்டு அரசனைத் திருத்தியருளினான் என்னும் தெள்ளிய வரலாறு நாம் போற்றுதற்குரியதன்றோ?