பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


சிறிதுதூரம் சென்றதும் ஸீன் ஹோகனுடைய பூட்ஸ்களில் ஒன்று அறுந்து கிழிந்துபோய்விட்டது. அடிப்படி நின்று அதைக் கட்டவேண்டியிருந்தது. இத்தகைய கஷ்டங்களையெல்லாம் மறந்து நடக்கும்படி ஸீன்டிரீஸி வழியெங்கும் வேடிக்கையான கதைகள் கூறி நண்பர்களை மகிழ்வித்து வந்தான். காஹிர் எவ்வளவு தூரம் என்று யாராவது கேட்டால், அடுத்த வளைவு திரும்பியதும் வந்து விடும் என்று அவன் கூறிவந்தான். ஒரு வளைவிலிருந்து மற்றொரு வளைவுக்குச் சுமார் மூன்று மைலுக்குக் குறைவில்லை. அடுத்த வளைவுக்குப் போனவுடன், அவன் அதற்கடுத்த வளைவென்று கூறி வந்தான். வருந்தி, வாடும் உள்ளத்திற்கு அவனுடைய வேடிக்கைச்சொற்கள் அமிர்தம் போலிருந்தன. வழியில் ஆங்காங்கே சில மணல் மேடுகளில் ஐந்து நிமிஷ நேரம் இளைப்பாறிக் கொண்டு அவர்கள் முன்னேறிச்சென்றனர்.

முடிவில் காஹிர் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய களைப்புக்கும் உடல் வலிக்கும்.அளவேயில்லை. எந்த நிமிஷம் எலும்புகள் ஒரே குவியலாக வீழ்ந்துவிடுமோ என்று எண்ணும்படி அவர்கள் விளங்கினார்கள். ஆதலால் மேற்கொண்டு யோசிப்பதில் பயனில்லை என்றும், எங்காவது இளைப்பாற வேண்டுமென்றும் கருதி நேராக ஊருக்குள் சென்றார்கள். காஹிர் ஸோலோஹெட் பக்கிலிருந்து பதினைந்து மைல் தூரத்திலிருந்தது. யாரிடம் சென்று இருப்பிடம் கேட்பது என்று அவர்களுக்குப் புலப்படவில்லை. பசி கொடுரமாயிருந்தது. குளிரோ உதிரத்தைக் கட்டியாக உறையும்படி செய்து விட்டது. கால்கள் கெஞ்சித் தடுமாறின. தான்பரீனுக்கு ஒரு நண்பருடைய ஞாபகம் வந்தது. டாபின் என்ற ஒரு மாதின் வீட்டிற்கு அவன் நண்பர்களை அழைத்துச் சென்றான். அவள் வந்த விருந்தினரை மிக்க உவகையுடன் உபசரித்தாள். அவர்களுக்கு வேண்டிய படுக்கை முதலானவற்றைக் கொடுத்தாள். அந்நிலையில் அம் மூவரும் அங்கு சிறிது இளைப்பாறினார்கள்.

மறுநாள் காலையில் அவர்கள் எழுந்தவுடன் பத்திரிகைகளை வாங்கி ஆவலுடன் பார்த்தனர். லோலோஹெட்பக் விஷயமாய் என்ன செய்திகள் வெளிவந்திருக்கின்றன. என்பதைக் கவனித்தனர். 'திப்பெரரி அக்கிரமம்!' 'இரட்டைப் போலிஸார் கொலை' முதலிய தலைப்புகள் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தன. இறந்த போலிஸாரின் பெயர்கள் மக்டொன்னல், ஒகானல் என்று அச்சிடப்பட்டிருந்தன. அவர்களுடைய மரண விசாரனையும் வெளிவந்திருந்தது.

பின்னால் நாட்கள் போகப்போக, நம் தொண்டர்களுக்குப் பல தகவல்கள் தெரியவந்தன. கொலைகள் சம்பந்தமான இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு மாணவர்களும் சிறையிலிடப்பட்டார்கள். எங்கும் பொதுக் கூட்டங்களிலும், மாதா கோயில்களிலும் கொலைகளைப் பற்றிய கண்டனங்கள் கூறப்பட்டன. அவைகளைக் கண்டிக்காத பத்திரிகையே கிடையாது. ஸின்பீன் சங்கங்கள் கூடக் கண்டனத்தில் கலந்து கொண்டன.

63