பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

145


என்ன காரணத்தினாலோ சாஷாவைப்பற்றியும் அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியைப்பற்றியும் நினைத்துப் பார்த்தாள் தாய்.

“ஆமாம். உமியும் தவிடுமாக மாவிருந்தால் ரொட்டி எப்படிச் சுடுவது?” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“அதுதான் இதிலுள்ள சங்கடம்!” என்றான் ஹஹோல்,

“ஆமாம்” என்றாள் தாய். அவளது நினைவில் அவளது கணவனின் உருவம் தோன்றியது: பாசியும் பச்சையும் படர்ந்து மூடிய பாறாங்கல்லைப்போல் உணர்ச்சியற்றுப்போன தடித்த சொரூபியான கணவனின் உருவம் நிழலிட்டது. அதே வேளையில் அவள் வேறொன்றையும் கற்பனை செய்து பார்த்தாள். நதாஷாவை ஹஹோலும் சாஷாவை பாவெலும் மணந்துகொண்டால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாள்.

“சரி, இதெல்லாம் இப்படியிருக்கக் காரணம் என்ன?” என்று மீண்டும் தன் பேச்சில் சூடுபிடிக்கப் பேச ஆரம்பித்தான் ஹஹோல். “உன் முகத்தில் மூக்கு இருப்பது எவ்வளவு தெளிவாயிருக்கிறதோ, அவ்வளவு தெளிவானது இது. மக்கள் அனைவரும் ஒரே சமநிலையில் இல்லாதிருப்பதுதான் இதற்கெல்லாம் மூலகாரணம், நாம் இந்த ஏற்ற இறக்கத்தைத் தட்டி நொறுக்கி சமதளப்படுத்துவோம். மனித சிந்தனையும், மனித உழைப்பும் சாதித்து வெற்றி கண்ட சகல பொருள்களையும் நாம் நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம். பயத்துக்கும் பொறாமைக்கும் மக்கள் அடிமையாகாமல், பேராசைக்கும் முட்டாள் தனத்துக்கும் ஆளாகாமல் நாம் அவர்களைக் காப்பாற்றுவோம்....”

இதன் பிறகு அவர்கள் அதே மாதிரிப் பல பேச்சுக்களைப் பேசிக்கொண்டார்கள்.

அந்திரேயை மீண்டும் தொழிற்சாலையில் வேலைக்கு எடுத்துக்கொண்டுவிட்டார்கள். அவன் தன் சம்பளத்தையெல்லாம் தாயிடமே கொடுத்துவிட்டான், அவளும் எந்தவிதக் கூச்சமோ தயக்கமோ இன்றி பாவெலிடமிருந்து பெறுவது போலவே சாதாரணமாக அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டாள்,

சமயங்களில் தன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அந்திரேய் தாயைப் பார்த்துச் சொல்லுவான்;

“என்ன அம்மா, கொஞ்சம் பாடம் படிப்போமா?’

அவள் சிரிப்பாள்; கண்டிப்பாக படிக்க மறுப்பாள். அவனது கண்ணின் குறும்புத்தனம் அவளைத் துன்புறுத்திவிடும்.