பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

மக்சீம் கார்க்கி


“நான் சொல்வதைக்கேள். துப்பறிபவர்கள் எல்லாம் என்னை மாப்பிள்ளை மாதிரி வட்டம் போட்டுத் திரிகிறார்கள். நான் சீக்கிரமே இங்கிருந்து போயாக வேண்டும்.... சரி. இவான், உனக்கு எப்படி இருக்கிறது? தேவலையா? நீலவ்னா, பாவெலிடமிருந்து ஏதாவது செய்தியுண்டா? சாஷா இங்கிருக்கிறாளா?”

சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டே ஏதேதோ கேள்விகள் கேட்டாள். அந்தக் கேள்விகளுக்கு அவள் பதிலை எதிர்நோக்கவில்லை. அவள் தாயையும் அந்தப் பையனையும் தனது சாம்பல் நிறக்கண்களால் பரிவோடு நோக்கித் தழுவினாள். தாய் அவளைக் கவனித்துப் பார்த்தவாறே தனக்குள்ளாக நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

“நானும் நல்லவர்களில் ஒருவனாகக் கருதப்படுகிறேன்!”

மீண்டும் அவள் இவானின் பக்கமாக குனிந்து பார்த்துச் சொன்னாள், “சீக்கிரமே குணம் அடைந்து, எழுந்து நடமாடு, மகனே!

பிறகு அவள் சாப்பாட்டு அறைக்குள் சென்றாள். அங்கு சோபியா சாஷாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள்:

“அவள் இதற்குள்ளாகவே முன்னூறு பிரதிகள் எடுத்து முடித்துவிட்டாள். இந்த வேகத்தில் போனால் அவள் தன்னைத்தானே சீக்கிரம் முடித்துக்கொண்டுவிடுவாள். இதுதான் வீரம்! இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும், அவர்களோடு உழைப்பதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம், சாஷா!”

“ஆமாம்” என்று அந்தப் பெண் மெதுவாகச் சொன்னாள்.

அன்று மாலை அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது சோபியா தாயை நோக்கிப் பேசினாள்:

“நீங்கள் இன்னும் ஒரு முறை கிராமப் புறத்துக்குச் சென்று வரவேண்டும். நீலவ்னா.”

“ரொம்ப சரி, எப்பொழுது?”

“மூன்று நாட்களுக்குள் உங்களுக்குப் புறப்பட்டுப் போகச் சௌகரியப்படுமா?”

“நிச்சயமாக”

“இந்தத்தடவை தபால் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வேறு மார்க்கமாக, நிகோல்ஸ்கி பிரதேசம் வழியாகப் போகவேண்டும்” என்று போதித்தான் நிகலாய். அவன் முகத்தைச் சுழித்து உம்மென்று இருந்தான், அந்த பாவம் அவனது வழக்கமாக அன்பு நிறைந்த அமைதி பாவத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தது.