தாய்
437
அவசர அவசரமாக எதையோ எடுத்து உடுத்திக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். கதவருகே ஒரு கணம் தயங்கினாள்.
“யாரது?” என்று கேட்டாள்.
“நான்தான்” என்றது ஒரு பழகாத குரல்.
“யார்?”
“கதவைத் திறவுங்கள்” என்று தணிந்த குரலில் வந்தது பதில்.
தாய் நாதாங்கியைத் தள்ளினாள்; கதவைக் காலால் தள்ளித் திறந்தாள். இக்நாத் உள்ளே வந்தான்.
“நான் இடம் தவறி வந்துவிடவில்லை” என்று உற்சாகத்தோடு கத்தினான் அவன்.
அவனது இடுப்பு வரையிலும் சேறு தெறித்துப் படிந்திருந்தது; அவனது முகம் கறுத்து, கண்கள் குழி விழுந்து போயிருந்தன. அவனது தொப்பிக்குள்ளிருந்து எல்லாப் பக்கத்திலும் அவனது சுருட்டைத் தலைமயிர் துருத்திக்கொண்டு வெளிவந்திருந்தது.
“நாங்கள் அபாயத்திலிருக்கிறோம்” என்று கதவை அடைத்துக்கொண்டே ரகசியமாகச் சொன்னான் அவன்.
“எனக்குத் தெரியும்.”
அவள் கூறியதைக் கேட்டு அந்த வாலிபன் ஆச்சரியம் அடைந்தான்:
“உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று திருகத்திருக விழித்தவாறே கேட்டான் அவன்.
அவள் சுருக்கமாக விளக்கிச் சொன்னாள்.
“உன்னுடைய அந்த இரண்டு தோழர்களையும்கூட அவர்கள் கொண்டுபோய்விட்டார்களா?”
“அவர்கள் அங்கில்லை. ஆஜர் கொடுக்கச் சென்றிருந்தார்கள், மிகயீல் மாமாவையும் சேர்த்து இதுவரை ஐந்து பேரைக் கொண்டுபோய்விட்டார்கள்.”
அவன் ஆழ்ந்த பெருமூச்செடுத்தான். லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான்:
“நான் மட்டும் தப்பிவிட்டேன். இப்போது அவர்கள் என்னைத் தேடித் திரிந்துகொண்டிருப்பார்கள்.”
“நீ எப்படித் தப்பிவர முடிந்தது?” என்று கேட்டாள் தாய். அடுத்த அறையின் கதவு லேசாகத் திறந்து கிடந்தது.